புத்திர பாக்கியம் வேண்டி தவமிருந்த ப்ருகு முனிவர்க்கு, மஹாலட்சுமியே குழந்தையாக வந்து அவரது ஆஸ்ரமத்தை அடைகிறாள். அமிர்தவல்லி என நாமகரணம் சூட்டி குழந்தையை வளர்த்து வருகிறார் ப்ருகு முனிவர். ஸ்ரீ மாதவன் ப்ருகு முனிவரை அணுகி அப்பெண்ணை மணக்க ஆசைப்படுவதாக தெரிவிக்கின்றார். பங்குனி உத்திரத் திருநாளில் மாதவனுக்கும்-அமிர்தவல்லிக்கும் திருமணம் முடித்து வைக்கின்றார் ப்ருகு முனிவர் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
இக்கோவிலின் அருகேயுள்ள மணிகைவரம் (அருண்டேல் தெரு) எனும் கிணற்றில் செவ்வல்லிப் பூ ஒன்றில் அவதரித்தார் பேயாழ்வார் - ஸ்ரீ மாதவப் பெருமாளின் நாந்தகம் எனும் வாளின் அம்சமாக கருதப்படுபவர். ஆழ்வார்களில் மூன்றாமவர். அனுதினமும் ஸ்ரீ மாதவனையே பூஜித்து வழிபட்டு வந்தவர். ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று அவதரித்தவர். இவர் அருளிய பாசுரங்கள் திருவந்தாதி எனப் பெயர் கொண்டு நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஒரு அங்கமாக உள்ளது.