சூதவனம், பிரம்மபுரம் என்றெல்லாம் ஆதியில் போற்றப்பட்ட இந்த க்ஷேத்திரம் - காசிக்கு சமமாக கருதப்படும் ஆறு சிவஸ்தலங்களுள் ஒன்று. உமையன்னை மயிலுருவில் சிவபெருமானை வழிபட்ட ஸ்தலமாதலால் மாயூரம் என்று வட மொழியிலும், மயிலாடுதுறை என்ற தமிழிலும் அழைக்கப்படுகின்றது.
ஒரு சமயம், கயிலையில் பஞ்சாட்சரத்தின் பொருளை உமையவளுக்கு விளக்கிக் கொண்டிருந்தார் சிவபெருமான். அங்கு ஆடிக் கொண்டிருந்த மயிலின் மீது உமையவளின் கவனம் சென்றது. இதனால் கோபமுற்ற சிவபெருமான், அவளை மயில் உருவம் கொள்ளும்படி சபித்து விடுகிறார்.
மாயூரத்திலும், மயிலாடுதுறையிலும் மயிலுருவில் தவம் கடந்து தம்மை அடையும்படி ஆக்ஞாபித்தார் இறைவன். அவ்வாறே உமையவள் மயிலுருவில் தவம் செய்து அபயாம்பிகையாக மாறி சிவபெருமானை அடையப் பெற்ற ஸ்தலம் என்பதால் கௌரி மாயூரம் எனப்படுகிறது. சிவபெருமானும் ஆண் மயிலாக வந்து அம்பாளுடன் ஆனந்த தாண்டவம் ஆடிய ஸ்தலம்.
அம்பாளின் பிரார்த்தனைப்படி துலா மாதத்தில் இங்கே காவிரியில் ஸ்நானம் செய்பவர் இறைவன் அருளைப் பெறுவர் என ஸ்தல புராணம் கூறுகின்றது.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகளிலும் ஸ்நானம் செய்த மக்களின் பாவங்கள் படிந்ததினால், சண்டாள கன்னிகைகளாக வடிவம் கொண்டு துயருற்று திரிந்தனர். கண்வ முனிவரின் யோசனைப்படி மாயூரம் வந்து, துலா மாதம் காவிரியில் மூழ்கி, பாவங்களை தொலைத்து சுய உருவம் பெற்றனர்.
துலா காவிரி ஸ்நானம் மாயூரத்தல் விசேஷம். 14 லோகத்திலுள்ள 63 கோடி தீர்த்தங்களும் அப்போது காவிரியில் கலப்பதாக ஐதீகம். ஐப்பசி கடைசி நாள் கடைமுகம் அன்று ஏராளமானவர்கள் நீராடுவர். அந்நாளில் நீராட வந்த நாதசர்மா-அநவித்யை தம்பதியினர் வருவதற்குள் கடைமுழுக்கு முடிந்துவிட்டது. மிகவும் வருத்தத்துடன் அன்றிரவு அங்கேயே தூங்கிய தம்பதியனரின் கனவில் தோன்றிய சிவபெருமான் மறுநாள் காலை சூரிய உதயத்திற்குள் குளித்தால் துலா மாத புண்ணியம் கிடைக்கும் என்று கூறினார். தம்பதிகளுக்காக வழக்கமான நேரத்தை முடக்கி வைத்ததால் முடமுழுக்கு எனப் பெயர் கொண்டது. (இங்கு காவிரி ஆறு குறுகலாக ஓடுகின்றது - 200 அடி அகலம் (அக்டோபர்-நவம்பர் மாதங்களில்) நிறைந்து ஓடும்.)
ஆடிப் பூர அம்மன் - ஆடிப் பூரத்தன்றும், ஆடி வெள்ளிகளிலும் காவிரிக்கரை வருவாள். வசந்த காலத்தில் 10 நாட்கள் சைத்ரோத்ஸவம் நடைபெறும். வைகாசியில் பிரம்மோற்சவம்.
துலா மாத உற்சவத்தின் 5ஆம் நாள் அம்பாள் மயிலாக இருந்து ஆடிய மயூர நடனமும், 7ஆம் நாள் திருக்கல்யாணமும் நடைபெறும். அன்றிரவே மயிலம்மையும் மயூரநாதரும் சேர்ந்து ஆடும் மயூர தாண்டவமும் ஐதீகமாக ஆடிக் காட்டுவார்கள்.
அம்பாள் வீதி உலா வருகையில், பலவித அலங்காரங்களுடனும், வகிட்டின் இருபுறமும் சூரிய பிரபை - சந்திர பிரபை மின்ன, சிகப்பு பட்டு உடுத்தி பவனி வருவது கண்கொள்ளா காட்சி.
அந்தணர்களை வேலை வாங்கி, பொருள் தராது ஏமாற்றிய பாவத்தால் ஒருவன் அவனது மறு பிறவியில் நரியாகப் பிறந்து சுடுகாட்டில் அலைந்தான். இங்கு வந்து ரிஷப தீர்த்தத்தில் நீராடி இவ்விறைவனை வழிபட்டு சுய உருவம் பெற்றான் என ஸ்தல வரலாறு.
தேவாரத் திருத்தலம்.