மூலவர்: மணிகண்டேஸ்வரர், அம்பாள்: அஞ்சனாட்சியம்மை.
மூலஸ்தான வாசலின் ஒரு புறம் வல்லபை விநாயகர் அமர்ந்து ஆசி வழங்குகின்றார். பத்துக் கரங்களுடனும், இடது தொடையில் வல்லபையை இருத்தியபடியும் காட்சி தருகின்றார். மறுபுறம் ஆறுமுகர் தரிசனம் தருகின்றார்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவர் மணிகண்டேஸ்வரர். விருதசீர நதிக்கரையில், அம்பாள் மணலால் உருவாக்கிய சிவலிங்க வடிவமே இங்கு மூலவராக காட்சி தருகிறார். தீண்டாத்திருமேனி, அபிஷேகம் கிடையாது. குவளை சாத்தி அபிஷேகம், சந்தன தைலக்காப்பு, புனுகு சட்டம் சாத்து செய்விக்கின்றனர்.
மால்வணங்கீசர், தயாநிதீஸ்வரர் ஆகிய திருநாமங்களும் உண்டு.
மூலவர் சந்நிதிக்கு நேர் எதிரே கைகூப்பியபடி, நின்ற கோலத்தில் மஹாவிஷ்ணு, அவருக்கு முன்னால் நந்தியெம்பெருமான்.
பஞ்சாம்ச பீடத்தில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அம்பாள் அஞ்சனாட்சியம்மை தரிசனம் தருகின்றாள். கருணை நாயகி என்பர். அருகில் மேருவை தரிசிக்கலாம்.
பால கணபதி, உச்சிஷ்ட கணபதி, இரட்டைப் பிள்ளையார்கள், நால்வர், பஞ்ச மாதாக்கள், சோளீஸ்வரர் என்னும் லிங்கத் திருமேனி, சிதம்பரேஸ்வரர், சோமாஸ்கந்தர், கஜலஷ்மி, வள்ளி தேவசேனா சமேத முருகன், வீரபத்ரர், அஷ்டபுஜ துர்க்கை, சந்திரன் மற்றும் கோஷ்ட மூர்த்தங்கள் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். கையில் கண் மலரோடு விஷ்ணுவின் உற்சவ மூர்த்தமும் உள்ளது.
கூப்பிய கரங்கள் இரண்டும், மான்-மழு ஏந்திய கரங்கள் இரண்டும், மானுட உடலும் கொண்ட நந்திகேஸ்வரர் வித்தியாசமான திருவுருவமாக தரிசனம் தருகின்றார்.
சிவனாருக்கு தீபம் காட்டிவிட்டு, விஷ்ணுவிற்கும் தீபாராதனை காட்டுகின்றனர். தீர்த்தம் கொடுத்து சடாரி சார்த்தும் சிவ ஸ்தலம். பராந்தக சோழன் காலத்திய பழமையான கோவில்.