வைகையில் வெள்ளப் பெருக்கு எடுத்து ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் வந்தது. ஊர்மக்கள் ஒன்று கூடி கரையை உயர்த்தும் பணியில் ஒருவர் வரவேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்து, வீட்டுக்கு இவ்வளவு கரை என்று அளந்தும் தந்தனர்.
பிட்டு செய்து விற்று அதில் வரும் காசைக் கொண்டு காலம் தள்ளும் வந்தி என்ற கிழவிக்குரிய பங்கை அளந்து அறிவித்து விட்டனர். கவலையுற்ற வந்தி நேராக சோமசுந்தரிடம் சென்று "என் வீட்டில் ஆட்கள் யாருமில்லை. என்னால் இந்த தள்ளாத வயதில் வேலையும் செய்ய முடியாது. நீதான் எனக்கு உதவ வேண்டும்" என்று முறையிடுகிறாள்.
வாட்டசாட்டமான வாலிப வடிவ தோற்றத்தில், தலையில் சும்மாடு வைத்து, கூடையும் மண்வெட்டியும் கொண்டு, "கூலிக்கு ஆள் வேணுமா?" என்று கேட்டபடி வந்தியை நோக்கி வந்தார் சோமசுந்தரர். வந்திருப்பது இறைவன் எனத் தெரியாத கிழவியும், "என் பங்குக்குரிய கரையை, மண்ணை கொட்டி உயர்த்தி தரவேண்டும். கூலியாக தர பிட்டு மட்டுமே இருக்கிறது" எனக் கூறினாள்.
"உதிர்ந்த பிட்டுக்களை தந்தால் போதும். முதலில் பிட்டு கொடு. அப்புறம் வேலை" என்றான் வந்தவன். வேலை செய்யாமலே ஆடிப்பாடி திரிந்துவிட்டு மீண்டும் வந்து பிட்டு கொடு என வாங்கி சாப்பிட்டு விட்டு அருகிலிருந்த மரத்தடிக்கு சென்று தூங்கிவிட்டான்.
மற்றவர்களுக்கு ஒதுக்கிய பங்கெல்லாம் அடைபட்டு முடிந்தன. வந்தி கிழவிக்கு ஒதுக்கிய பங்கு அடைபடாமல் அப்படியே இருந்தது. பணிகளை மேற்பார்வையிட வந்த பாண்டியன், ஒரு இடத்தை மட்டும் கரையை உயர்த்தாமல் விட்டிருப்பதைக் கண்டு சுற்றுமுற்றும் பார்த்தான். தூங்கிக் கொண்டு இருந்தவனை எழுப்ப முயற்சித்தான். ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தவன் அசைந்து கொடுக்கவில்லை. கோபம் கொண்ட மன்னன் பிரம்பு ஒன்றை எடுத்து அந்த கூலியாளின் முதுகில் அடித்தான்.
கூலியாள் முதுகில் பட்ட பிரம்படி, இவ்வுலகிலுள்ள எல்லா ஜீவன்கள் மீதும் பட்டது. பாண்டியன் முதுகிலும் பிரம்படி விழுந்தது. தூங்கியவன் எழுந்து கொஞ்சம் மண்ணை அள்ளி அடைபடாத இடத்தில் போட்டதும் வெள்ளப் பெருக்கு நின்றது. கூலியாளாக வந்தவன் சோமசுந்தரக் கடவுள் என பாண்டியனுக்கு புரிந்தது. தன் தவறை உணர்ந்து வருந்தினான்.
சிவனாரின் 64 திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. பிட்டுக்கு மண் சுமந்த படலத் திருவிழாவை ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத மூல நட்சத்திர நாளில் இவ்வாலயத்தில் நடத்திக் காட்டுகின்றனர். இவ்விழாவைக் காண திருப்பரங்குன்றத்திலிருந்து முருகனும், திருவாதவூர் மாணிக்கவாசகரும் இங்கு வருகின்றனர்.