ஆதியில் இப்பிரதேசம் முழுவதுமாக துளசி செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்ததால் பிருந்தாரண்ய க்ஷேத்ரம் என்று பெயர் பெற்றது. முன்நாளில் அல்லிக்கேணிகள் மிகுந்திருந்த பகுதியாக இருந்ததால் திருவல்லிக்கேணி எனப் பெயர் கொண்டதாகக் கூறப்படுகிறது.
திருமாலுடன் ஊடல் கொண்டு அவரைப் பிரிந்து பூலோகம் வந்த திருமகள், இத்தலத்தில் குழந்தை வடிவில் கிடந்தாள். இங்கு தவம் மேற்கொண்டிருந்த பிருகு முனிவர் குழந்தையைக் கண்டெடுத்து வேதவல்லி எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தார். எம்பெருமான் ராஜபுத்ரனாக வந்து அவளைத் திருமணம் செய்து கொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
சுமதி எனும் அரசன், திருவேங்கடமுடையானைக் கண்ணனாகக் காண விரும்பிப் பிரார்த்தித்தான். அவனது விருப்பத்திற்கு இணங்க வேங்கடகிருஷ்ணன் எனும் திருநாமத்துடன் இங்கு மூலவராகச் சேவை சாதித்தார். அதிலும் குடும்ப சகிதமாகக் காட்சி தந்திருப்பது கூடுதல் விசேஷம். பகவத் கீதையின் ஸ்வரூபமே மூலமூர்த்தியின் வடிவம் என்பர்.
ஐந்து திருக்கோலங்களில் அர்ச்சாவதார தரிசனம் காட்டும் ஸ்தலம்.
ஸ்ரீரங்கத்து ரங்கநாதர், அஹோபிலத்து தௌ்ளிய சிங்கர், காஞ்சி கஜேந்திர வரதர், அயோத்யா ஸ்ரீ ராமர், திருப்பதி வெங்கடேசர் ஆகிய ஐவரும் சேவை சாதிப்பதால் பஞ்ச மூர்த்தி ஸ்தலம் எனப் போற்றுவர்.
பாரதப்போரில் அர்ச்சுணனுக்குச் சாரதியாக இருந்தபோது, ஆயுதம் எதுவும் ஏந்துவதில்லை எனச் சபதம் செய்ததை நினைவுறுத்தும் வகையில், கையில் சக்ராயுதம் இல்லாமல் சங்கு மட்டுமே வைத்துள்ளார். போரில் அர்ச்சுணன் மீது பீஷ்மர் தொடுத்த அம்புகளைத் தாமே ஏற்றுக் கொண்டார் அல்லவா? அதை விளக்கும் வகையில் திருமுகத்தில் அம்பு பட்ட தழும்புகளுடன் காணப்படுகிறார்.
திங்கள்-வெள்ளிக் கிழமைகளில் பார்த்தசாரதிக்கும், புதன்-சனிக் கிழமைகளில் நரசிம்மருக்கும், வெள்ளிக் கிழமைகளில் தாயார் மற்றும் இதர மூர்த்திகளுக்கும் திருமஞ்சனம் நடத்துகின்றனர். இவ்வாலயத்தில் நைவேத்யத்திற்குக் கடலை எண்ணெய் மற்றும் மிளகாய் சேர்ப்பதில்லை. சுவாமி திருமேனியில் விழுப்புண்கள் இருப்பதால் மிளகாய் சேர்ப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
ரோஹிணி - திருவோண நட்சத்திர நாட்களில் பார்த்தசாரதி பெருமாளுக்கும், புனர்வசு நட்சத்திர நாள் ஸ்ரீ ராமருக்கும், ஹஸ்த நட்சத்திர நாள் ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கும், சுவாதி நட்சத்திர நாள் ஸ்ரீ நரசிம்மருக்கும், ரேவதி நட்சத்திர நாள் ஸ்ரீ ரங்கநாதருக்கும், உத்திர நட்சத்திர நாள் வேதவல்லித் தாயாருக்கும் உகந்த தினங்கள். அன்றைய தினங்களில் சேவார்த்திகள் ஆராதிக்கலாம்.
ஆலயத்தின் முன்னாலுள்ள கைரவணி தீர்த்தம் எனும் குளக்கரையில் ஒரு மஹான் தவம் புரிந்து வந்தார். குளத்தில் இருந்த மீன் ஒன்றினால் அவரது தவம் கலைந்து போனதால், இக்குளத்தில் மீன்களே இருக்கலாகாது எனச் சாபமிட்டார். எனவே இக்குளத்தில் மீன்கள் வசிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.