சிவபெருமானின் திருமுடியைக் காண அன்னப் பறவை உருவம் கொண்டு ஆகாயத்தில் பறந்தார் பிரம்மா. திருவடியைக் காண வராக அவதாரம் எடுத்து கீழே பள்ளம் பறித்து பாதாளம் வரை போகலானார் விஷ்ணு. இருவருமே இலக்கை அடையவில்லை.
வராகம் தனது அவதார நோக்கம் மறந்து, கொம்பால் பூமியைக் குத்திக் கிளறி அட்டகாசம் செய்யத் தொடங்கியது. வராகத்தின் கொட்டத்தை அடக்க அதனது கொம்புகளை முறித்து அவற்றை தனது மார்பினில் அணிந்து கொண்டார் சிவபெருமான். இதனால் பாதாளேஸ்வரர் என்ற பெயர் கொண்டார்.
பிரம்மாவுக்கும், விஷ்ணுவிற்கும் இடையே, சிவபெருமானின் திருமுடி - திருவடி தேடும் போட்டி தொடங்கிய இடமே அரித்துவாரமங்கலம். போட்டி முடிந்த இடம் திருவண்ணாமலை.
அரி (விஷ்ணு) - தை (உள் புகுந்த) - பெரும்பாழி (பெரிய பள்ளம்) என இவ்வூரின் தேவார காலத்துப் பெயர் அரதைப்பெரும்பாழி என வழங்கலாயிற்று. வராக விஷ்ணு குடைந்த துவாரம் இருப்பதால் அரி-துவார-மங்கலம் அரித்துவாரமங்கலம் என்று தற்போதையப் பெயர் வழங்கலாயிற்று.
கமலாகரன் என்பவனின் மூப்பை நீக்கி இளமை ஆக்கிய இறைவன் எழுந்தருளியுள்ள தலம். உபமன்யு மகரிஷிக்கு நடனமாடிக் காட்டியருளிய தலம். இறையுருவம் என அறியாமல் சிவலிங்கத்தின் மீது சந்தனம் அரைத்த ஒருவனுக்கு முக்தி கொடுத்த தலம் என புராணப் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
தேவாரத் திருத்தலம் - பஞ்ச ஆரண்ய தலங்களுள் ஒன்று - பஞ்ச ஆரண்யங்களுள் சமி வனம் (அதாவது வன்னி) எனப்படுகிறது.