வந்தீஸ்வரர் என்றால் மலடிக்கு மகவருளும் தெய்வம் எனப் பொருள். கீழேயுள்ள குமார தீர்த்தத்தில் நீராடிவிட்டு இவரை வழிபடுபவர்களுக்கு சந்தான பாக்கியம் உண்டு. பிள்ளைப்பேறு பிரார்த்திப்பவர்களின் பொருட்டு, இமயமலையிலிருந்து இவ்விறைவனைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தார் பிரம்மன் என ஸ்தல வரலாறு.
13ஆம் நூற்றாண்டில் ஆண்ட பாண்டியர்கள் இதைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. இங்கு மலடிக்கல் என்ற பெரிய பாறை ஒன்று உள்ளது. செங்குத்தான மலைப் பிதுக்கத்தில் வெளிவந்துள்ள இப்பாறையை மலடிகள் மூன்று முறை வலம் வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பார்கள். பாறையின் கீழ் 800 அடி பள்ளம் ஒன்றும் உள்ளது. குன்றின் அடிவாரத்தில் பஞ்ச பாண்டவர்களின் கல் படுக்கைகள் இருக்கின்றன.
வேட்டுவர்களின் தலைவன் கட்டிய நாகேஸ்வர சுவாமி கோவிலொன்றும் மலை மீது இருக்கின்றது.