பார்வையற்ற முதியவர் ஒருவர் இவ்வூருக்கு வந்தார். பல நாட்களாக பட்டினி கிடந்ததால் பசி தாங்க முடியாமல், ஒவ்வொரு வீடாகச் சென்று, சோறு தருமாறு பிச்சை கேட்டார். 'அடுத்த வீடு பார்...' என ஒவ்வொருவராகக் கூறி அவரை விரட்டினார்கள். யாருமே சோறு போடவில்லை.
தெருக்கோடியிலிருந்த பத்ரகாளி கோவிலின் முன்பாக நின்று கொண்டு, அதையும் ஒரு வீடு எனக் கருதி பிச்சைக் கேட்டார். அவரது உண்மை நிலையை அறிந்த காளி அவருக்கு சோறு போட்டாள். உணவளித்தது காளி என அறியாத பெரியவர், 'மகராசி, நீ நன்றாக இருக்கணும்' என வாழ்த்தி விட்டு உணவருந்தினார்.
இரவு நேரமானதாலும், உணவு உண்ட களைப்பினாலும் அங்கேயே படுத்து தூங்கி விட்டார் பெரியவர். மறு நாள் காலை, ஊர் மக்கள் கூடி, கோவிலில் படுத்துக் கொண்டதற்காக பெரியவரை கோபித்தனர். 'இந்த வீட்டு அம்மாதான் பசியாற உணவு தந்தவள்' என பெரியவர் கூறியதை நம்ப மறுத்து, அவரை திட்டி அவமானப்படுத்தினார்கள்.
பெரியவர் அழுது புலம்பி உண்மையை தெளிவுபடுத்துமாறு காளியிடம் வேண்டுகோள் விடுத்தார். ஊர் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பெரியவர் பிச்சை கேட்காமலேயே, அவரது பாத்திரம் நிறைய சோறு நிரம்பி வழிந்தது. இந்த அதிசயத்தைக் கண்ட ஊர் மக்கள் மனம் திருந்தி பெரியவரிடம் மன்னிப்பு கேட்டனர்.
ஊர் மக்கள், இப்போது தினமும் உச்சி வேளையில் காளிக்கு பூஜை செய்து, படையல் வைத்து, பசியோடு வரும் நபர்களுக்கு உணவளித்து மகிழ்கின்றனர்.