கூர்ம அவதாரம் எடுத்த மஹாவிஷ்ணு, தனது அவதார நோக்கத்தை மறந்து, செருக்குற்று, கடலை கலக்கி அட்டகாசம் செய்தார். அவர் முன் தோன்றிய சிவபெருமான், அவரது அவதார நோக்கத்தை எடுத்துரைத்து, அகங்காரத்தை அடக்கி, ஆமை ஓட்டினை அணிந்தார் என ஸ்தல வரலாறு.
அறுபத்திமூன்று நாயன்மார்களுள் ஒருவரான அரிவட்ட நாயனார் அவதரித்த ஊர். (தண்டலைச்சேரியின் கிழக்கே 1 கி.மி தூரத்திலுள்ள கணமங்கலத்திடல்) நீண்டு வளைந்த அரிவாளை தாங்கியும், தலைப்பாகை அணிந்தும் காணப்படுவார்.
தனக்கு கூலியாக வழங்கப்படும் செந்நெல்லை அரிசியாக்கி சாதம் சமைத்து, செங்கீரை சேர்த்து, மாவடு சேர்த்து, இறைவனுக்கு படைப்பது அரிவட்டநாயனாரின் பழக்கம். வறுமையுள்ள காலத்திலும் தவறாது செய்து வந்தார்.
ஒரு நாள் உச்சி வெய்யிலில் பசி மயக்கம் வேறு சேர்ந்து கொள்ள தள்ளாடிக் கொண்டே ஸ்வாமிக்கு நைவைத்யம் கொண்டு வருகையில், நிலை தடுமாறி கீழே விழுந்ததில், கொண்டு வந்த சோறும் மாவடுவும், பூமியில் சிதறி காய்ந்த வெடிப்பிற்குள் சென்றது.
இறைவனுக்கு படைக்க முடியாமல் வீணாய்ப் போனதே என வருத்தமுற்ற நாயனார், அரிவாளால் தனது கழுத்தை வெட்டிக் கொள்ள முற்பட்டார். அப்போது வெடுக் என்று மாவடு கடிக்கும் சத்தம் கேட்டது. நிலப்பிளவிலிருந்து ஒரு கை வெளியே தோன்றி நாயனாரை தடுத்தாட் கொண்டதாக ஸ்தல வரலாறு.
அரிவாளால் தன்னை வெட்டிக் கொள்ள எத்தனித்ததால் அரிவட்ட நாயனார் என்றானார்.
அரிவட்ட நாயனார் முக்தி பெற்ற ஸ்தலம்.
தேவாரத்திருத்தலம்