பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து வெளிவந்த மஹாலட்சுமியை விஷ்ணு இத்தலத்தில் மணம் புரிந்துகொண்டதாக ஸ்தல வரலாறு. திருமணத்திற்கு வந்த தேவர்கள் அனைவரும் கூட்டமாக திருமாலை தரிசிக்க வந்த இடம் என்பதால் திருத்தேவனார்தொகை என அழைக்கப்படுகின்றது. தொகை என்றால் கூட்டம் எனப் பொருள்.
சர்வமங்கள மாங்கல்யை அலர்மேல் மங்கை நித்யவாசம் செய்யும் இடம். வசிஷ்ட மகரிஷி பூஜித்து வழிபட்ட ஸ்தலம். 108 திவ்ய தேசங்களுள் ஒன்று - திருநாங்கூர் திவ்ய தேசங்களுள் ஒன்று.
ஏகாதச ருத்ர பீடங்களுள் - உக்ர பிராண பீடம், மூலவர்: ஐராவதேஸ்வரர் (பெருந்தோட்டம்).
11 திவ்ய தேச ஸ்தலங்கள் தோன்றிய வரலாறு:
சிவபெருமானை யாகத்திற்கு அழைக்காமலும், யாகத்தின் அவிர்பாகத்தைத் தராமலும், அவமானப்படுத்தி தட்சன் செய்யும் யாகத்திற்கு அழைப்பின்றி போனாள் பார்வதி. எவ்வளவு அறிவுரைகள் கூறியும் காதில் வாங்கிக்கொள்ளாமல் செருக்குடன் யாகத்தைத் தொடர்ந்து நடத்தினான் தட்சன்.
யாகத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தில், யாக குண்டத்தில் குதித்து, தன் ஸ்தூல உடலை அழித்துக்கொண்டாள் பார்வதி.
நடந்தவைகள் அனைத்தையும் அறிந்துகொண்ட சிவபெருமான் ஆவேசம் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார்.
உக்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கையில், அவரது ஜடாமுடி தரையில் பட்டு, அதிலிருந்து ஒரு சிவன் தோன்றி, ருத்ர தாண்டவம் ஆடினார். இவ்வாறாக மூலசிவனின் ஜடாமுடி தரையில் படும்போதெல்லாம் ஒரு சிவன் தோன்றி ருத்ர தாண்டவம் ஆட, முடிவாக 11 ருத்ரமூர்த்திகள் ஆடிக்கொண்டிருந்தனர்.
11 சிவ வடிவங்கள் கோபாவேசமாக ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தால் உலகிற்கு அழிவு என கலக்கமுற்று பயந்த முனிவர்கள் திருமாலைச் சரணடைந்தனர். திருமாலும் 11 வித வடிவங்களில் தோன்றி, 11 சிவ தாண்டவர்கள் முன் நின்று, அவர்களைச் சாந்தப்படுத்தினார் என ஸ்தல வரலாறு.
சினம் தணிந்த சிவபெருமான் ஒவ்வொரு வடிவத்தையும் ஒருவருக்குள் ஒருவராகச் செலுத்தி, இறுதியில் ஒரே வடிவமாக நின்றார். தன்னைப் போலவே ஏகாதச வடிவங்கள் கொண்டு எழுந்தருள வேண்டுமென சிவன் கோரியதால், இத்தலத்தில் 11 பெருமாள்களாக திருமால் சேவை சாதிக்கின்றார் என ஸ்தல வரலாறு.