இவ்வாலயத்து வன்னி மரத்தடியில் அமர்ந்து அகஸ்தியர் தினமும் தியானத்தில் ஈடுபட்டார். நோய் கண்ட அவரது உடல்நிலை குணமடைய, கடல் நீரால் இவ்விறைவனை அபிஷேகம் செய்து பூஜித்து, இறைவனருளால் குணமடைந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இதனால் இறைவனுக்கு 'நோய் தீர்த்த பிரான்' என்ற பெயரும் உண்டு.
'பாலித்தல்' என்றால் பாதுகாத்தல் என்று பொருள். தீர்த்தங்களை பாதுகாக்கும் இறைவன் என்பதாலும், ருத்ரர்கள் நீர் மயமாக விளங்குவதாலும், தீர்த்தவாரியின்போது இவ்விறைவனுக்கே முதலில் தீர்த்தம் வழங்கப்படுவதாலும், இவர் 'தீர்த்தபாலீஸ்வரர்' எனும் பெயர் கொண்டார் எனக் கூறப்படுகிறது.
மாசி மாத தீர்த்தவாரியின்போது, ஏழு சிவாலயங்களின் கடல் நீராட்டு விழாவில், இவ்விறைவனுக்கே முதன்மை தரப்படுகிறது.
இது சென்னையிலுள்ள சப்த ருத்ர ஸ்தானங்களுள் ஒன்றாகும்.