சிவபெருமானின் பல்வேறு நடனங்களைக் காண விரும்பிய உமாதேவி, இறைவன் தன்னால் ஆடிய கௌரி தாண்டவத்தைக் காண விரும்பி திருப்புத்தூர் வந்தடைந்தாள். இங்குள்ள கொன்றை வனத்தில் இருந்த லிங்க வடிவான சுயம்புவைப் பூஜித்தாள். அம்மையாரின் தவத்தில் மகிழ்ந்த இறைவன், அம்பாள் முன்பாகத் தோன்றி கௌரி தாண்டவம் ஆடிக் காண்பித்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஆடிக் காட்டிய இடத்தை சிற்சபை என்கின்றனர். புஜங்கத்திராசம் அல்லது ரட்சா தாண்டவம் என்றெல்லாம் போற்றப்படும் இந்த நடனம், கால்களின் கீழ் பாம்பு வந்துவிட்டால் அஞ்சி காலைத் தூக்குவது போல் இருக்கும்.
இந்த நடனத்தைக் காண விரும்பிய மஹாலட்சுமி, திருமாலின் யோசனைப்படி திருப்புத்தூருக்கு வந்து தவம் மேற்கொண்டு வழிபட்டு வந்தாள். லட்சுமி தேவிக்காக மீண்டும் ஒரு முறை நடனம் ஆடிக் காட்டினார் இறைவன்.
தாருகாவனத்தை சிவபெருமான் அழித்ததும் உருவான நெருப்பை சாந்தப்படுத்தி ஒரு குழந்தையாக்கி வளர்த்து வந்தாள் உமையன்னை. அந்தக் குழந்தையை விஸ்வரூபமெடுத்து அரக்கர்களை அழிக்க ஏவினார் சிவபெருமான். அப்படி அக்னியிலிருந்து எழுந்தவரே பைரவர்.
பிரகதாரணர் எனும் முனிவர் அசுரர்களிடம் இருந்து உலகைக் காக்க காசியில் வேள்வி ஒன்றை நடத்தினார் என்றும் மற்றுமொரு கருத்தும் உண்டு. அசுரர்களை அழித்த பாவத்தைப் போக்கிக் கொள்ள பல ஸ்தலங்கள் சென்று சிவபூஜை செய்தார். பின்னர் இவ்வூருக்கு வந்து யோகத்தில் அமர்ந்தார்.
இந்திரனின் மகனான ஜெயந்தன், தான் பெற்ற சாபம் காரணமாக ஒரு பூதமாகி தலையில் மலையைச் சுமந்தபடி, விமோசனத்தை நாடி க்ஷேத்ராடனம் புறப்பட்டான். இத்தலத்திற்கு வந்து யோக பைரவரை தரிசித்ததும், தலையிலிருந்த மலை விடுபட்டு பூத வடிவம் நீங்கப் பெற்றான். கையிலிருந்த இடி ஆயுதம் பைரவரின் கரத்தில் பழமாக அமர்ந்தது.
சித்திரை மாத முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஜெயந்தன் விழா பிரசித்தமானது. அஷ்டபைரவருக்கு அஷ்ட வித அர்ச்சனை, அஷ்ட வித நைவேத்தியம், அஷ்ட வித சமித்துகளில் வேள்வி நடத்துகின்றனர். கார்த்திகை மாதம் சம்பக சஷ்டி எனும் அஷ்ட பைரவ அர்ச்சனை ஹோமம் சிறப்பாக நடத்துகின்றனர். புனுகு சாத்துதல், மாவிளக்கு ஏற்றுதல் போன்ற பிரார்த்தனைகள். சம்பகாசுரன் எனும் அரக்கனை அழித்ததால் சம்பக சஷ்டி எனக் கொண்டாடுகின்றனர்.
நகரத்தார் சீமையின் அஷ்ட பைரவ ஸ்தலங்களுள் திருப்புத்தூரை சிரசாகவும், வைரவன்பட்டியை இதயமாகவும், இலுப்பைக்குடியைப் பாதமாகவும் கருதுகின்றனர்.
மார்கழி திருவாதிரை நாளில் ஸ்ரீ நடராஜரின் உற்சவத் திருமேனி வீதியுலா வரும்.
முழுவதும் கற்களால் உருவான கோவில் என்பதால் 'கற்றளி' எனப்பட்டது. திருவாகிய மஹாலட்சுமி பூஜித்ததால் 'திருக்கற்றளி' எனப் பெயர் கொண்டு பின்னர் மருவி 'திருத்தளி' என்றானது. இதனால் இங்கு எழுந்தருளியுள்ள மூலவர் திருத்தளிநாதர் எனப்படுகிறார்.
எறும்பு புற்றுக்கள் நிறைந்திருந்த ஊர் என்பதால் 'திருப்புற்றூர்' எனப் பெயருற்று பின்னர் மருவி 'திருப்புத்தூர்' என்றானது. புற்றுக்கு வடமொழியில் 'வான்மீகம்' எனப் பெயர். எனவே 'வான்மீகபுரம்' என்றழைக்கப்பட்டது.
தருமி எனும் ஏழைப் புலவனுக்குப் பாடல் கொடுத்தருளி திருவிளையாடல் புரிந்த ஸ்தலம் இதுவே எனக் கூறப்படுகிறது.