மூலவர்: திரிபுராந்தகேஸ்வரர், அம்பாள்: திரிபுராந்தகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி கிழக்கு நோக்கி தரிசனம் தருகின்றார் திரிபுராந்தகேஸ்வரர்.
சுயம்பு லிங்கம். தீண்டாத்திருமேனி. திருவிற்கோலநாதர் என்ற திருநாமமும் உண்டு. 16 முழ வேஷ்டி அணியும் பெரிய திருமேனி. கஜப்பிருஷ்ட விமானம் கொண்ட கருவறை.
நாட்டில் போர் மூளும் அபாயம் என்றால் செந்நிறமாகவும், மழை மிகுதியாகப் பெய்தால் வெண்மை படர்ந்தும் நிறம் மாறும் அதிசய லிங்கம். அக்னி கலை ஞானத்தால் உருவாக்கப்பட்டு இருப்பதால் மாறும் தன்மை இருப்பதாக கூறுகின்றனர்.
சிவாலய கோஷ்ட மூர்த்தங்கள் அனைத்தும் பார்க்க அழகாக இருக்கின்றன. அச்சிறு விநாயகர், வாகனம் இல்லாத பைரவர் ஆகிய விசேஷ மூர்த்தங்களை அவசியம் தரிசிக்க வேண்டும்.
அம்பாள் திரிபுராந்தகி நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள். திரிபுரசுந்தரி என்றும் அழைக்கிறார்கள்.
கூவம் ஆற்றுக்கரையிலுள்ள திருமஞ்சன மேடை எனுமிடத்திலிருந்து (கோவிலிலிருந்து 2 கி.மீ. தூரம்) தினந்தோறும் தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்கின்றனர். தீர்த்தம் கொண்டு வருபவர் சோம்பல் காரணமாக, வேறு ஏதாவது தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்யக் கொடுத்தால், ஸ்வாமி மீது சிற்றெறும்புகள் படர்ந்து, தவறை சுட்டிக் காட்டி விடும், என அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.
அச்சிறுகேணி என்கிற கூபாக்னி தீர்த்தம் கோவிலுக்கு கிழக்கில் திருக்குளமாக இருக்கிறது. இதில் தவளைகள் வசிப்பதில்லை.
குறிப்பு:
அர்ச்சனை சாமான்கள், வேத பாடசாலைக்கு வேண்டிய பொருட்கள் ஆகியன கையோடு எடுத்து செல்ல வேண்டும். அர்ச்சகருக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். (அர்ச்சகர் இலம்பையங்கோட்டுரில் இருக்கிறார்)
தேரின் அச்சு முறிந்தபோது ரிஷப வடிவம் கொண்டு தாங்கிய திருமால் கரிய மாணிக்கப் பெருமாள் என்ற திருநாமத்துடன் இவ்வாலயத்தின் தெற்கில் கோவில் கொண்டுள்ளார்.