வசிஷ்டர் தம் பக்தியால் வெண்ணெய் மயமான கிருஷ்ணனை, திவ்யமங்கள விக்ரஹமாகச் செய்து (இளகி திரவமாகாமல் கட்டி), அதன் முன் அமர்ந்து தியானத்தில் வழிபட்டுக் கொண்டிருக்கையில், ஒரு நாள் பெருமாள் கோபாலனாக வந்து, வசிஷ்டர் ஆராதித்துக் கொண்டிருக்கும் வெண்ணெய் கண்ணனை, அமுது செய்ய ஆரம்பித்தார். இதைப் பார்த்த வசிஷ்டர் கோபாலனைப் பிடிக்க ஓட, கோபாலன் மேற்கு திசை நோக்கி ஓட, மகிழ மரத்தடியில் தவம் செய்து கொண்டிருந்த ரிஷிகள், பக்தியாகிய பாசக் கயிற்றால் கோபாலனைக் கட்டிப்போட்டார்கள். கட்டுண்ட கண்ணன் எழுந்தருளிய கோவில் என்பதால் கண்ணங்குடி எனப் பெயர் கொண்டது.
'காயா மகிழ், உறங்காப்புளி, தோரா வழக்கு, ஊறாக் கிணறு' - திருக்கண்ணங்குடி என்ற பழமொழி இங்கு பிரசித்தமாகி வழக்கத்திலுள்ளது.
மூலஸ்தானத்திற்குப் பின்னால் ஒரு மகிழமரம் உள்ளது. இதில் பூவும் காயும் இருந்தாலும் விதையை நட்டால் காய்ப்பதும் இல்லை. இதனால் 'காயா மகிழ்' என்று பெயர்.
ஆதி காலத்தில் இத்தலத்தில் இருந்த புளியமரத்தின் இலைகள் இரவு நேரங்களில் மூடிக் கொள்வதில்லை என்பதால் 'உறங்காப்புளி' என்ற பெயர். இம்மரம், காலப்போக்கில் பட்டுவிட்டதாகக் கூறுகின்றனர்.
ஸ்ரீரங்கத்தில் மதில் கட்ட பொருள் வேண்டியிருந்ததால், திருமங்கை ஆழ்வார் - நாகப்பட்டினத்திலுள்ள பௌத்த விஹாரத்து, தங்கமயமான புத்தர் விக்ரஹத்தைக் களவு செய்து கொண்டு வருகையில், இவ்வூரை நெருங்கும்போது, இரவு வேளை வந்துவிட்டபடியால், ஒரு வயலில் குழி தோண்டி புதைத்துவிட்டுச் சென்றார்.
மறு நாள் காலை, வயலின் சொந்தக்காரன் வயலை உழுவதற்கு முற்பட்டபோது, நிலத்தில் தமக்கும் உரிமை இருப்பதாக வாதிட்டு உழுவதை நிறுத்தினார் திருமங்கை ஆழ்வார். இது பற்றிய பிராதை மறு நாள் விசாரிக்க முடிவு செய்தனர் ஊர்ப் பெரியவர்கள். அன்றிரவே புதைத்து வைத்திருந்த சிலையை எடுத்துக் கொண்டு ஊரை விட்டே போய்விட்டார் திருமங்கை ஆழ்வார். மறு நாள் காலை ஊர் பெரியவர்கள் கூடி நிற்க, நிலத்தின் உரிமையை கொண்டாடி பிராது கொடுத்த திருமங்கை ஆழ்வார் வரவேயில்லை. வீண் வழக்காடியதால் 'தோரா வழக்கு' எனப் பிரசித்தம்.
இவ்வூரில் குடிக்க தண்ணீர் இல்லாது மக்கள் அவதியுறுவதை தலையாரி ஒருவன் திருமங்கை ஆழ்வார் வந்தபோது கூறியுள்ளான். அவர் ஒரு கல்லை விட்டெறிந்து - அது விழுந்த இடத்தில் குடிநீர்க் கேணியை உண்டாக்கினார். இந்தக் கேணியைத் தவிர வேறெங்கும் தண்ணீர் இல்லாததால் 'ஊறாக் கிணறு' என்றானது.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று - பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களுள் ஒன்று.