ஸ்ருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவர் இவ்வுலகைக் கண்டு வர சுற்றி வரும் வேளையில், இந்த தர்ப்பாரண்ய க்ஷேத்ரம் வந்தார். இங்கே தர்ப்பை அடர்ந்த புதரில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தை தரிசித்து, வேத மந்திரங்களால் ஸ்தோத்திரம் செய்து, படைப்புத் தொழிலைச் சரிவர செய்ய அருளுமாறு வேண்டினார்.
பிரம்மன், சரஸ்வதி, அன்னபட்சி மூவரும் இங்கு தீர்த்தங்களை அமைத்து, விதிப்படி மனத்தாலேயே ஒரு கோவிலைக் கற்பித்து படைத்தார் பிரம்மன்.
ஆற்றல், அழகு, வீரம் அனைத்தும் நிறைந்த நள மகாராஜன், தமயந்தி எனும் அழகிய பெண்ணை மணந்து ஆட்சி புரிந்து வந்தான். இவற்றால் பொறாமையுற்ற நளனின் பங்காளியான புட்கரன் என்பவன் கலி புருஷனை துணையாகக் கொண்டு, சூதாட்டத்திற்கு அழைத்து வஞ்சகமாக தோற்கடித்தான்.
இதனால் நாடு, நகரம், மனைவி, செல்வம் அனைத்தும் இழந்த நளன் காட்டில் திரிந்தான். கார்க்கோடகனால் தீண்டப் பெற்றான். பல இன்னல்களுக்குப் பிறகு இழந்தனவற்றை எல்லாம் திரும்பப்பெற்றான். இழந்தவற்றை திரும்பப் பெற்றும் மன நிம்மதியின்றி சித்தபிரமை பிடித்தவன் போலிருந்தான்.
பரத்வாஜ முனிவரின் யோசனைப்படி, திருநள்ளாறு வந்து சேர்ந்தான் நளன். இனியும் இவனைத் தொடர்ந்தால் சிவ அபராதி ஆவோம் என, சனி பகவான் நளனை விட்டுப் பிரிந்தார்.
நளனின் வழிபாட்டிலும், பூஜைகளிலும் மகிழ்ந்த இறைவன் பிரத்யட்சமாகி அவனுக்கு ஆசி வழங்கி நற்பலன்களை அளித்தார். சனீஸ்வர பகவானின் அருளும் கிடைக்கப் பெற்றான் நளன். தனக்கு நற்பலன்கள் வழங்கியது போல், எல்லோருக்கும் நற்பலன்கள் வழங்க இங்கேயே எழுந்தருள வேண்டும் என நளன் பிரார்த்தித்தான்.
கலிதோஷம் நீங்கப் பெற்று, சனீஸ்வரரின் அருளும் கிடைக்கப் பெற்ற நளன், இங்கு தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி, கோவிலும் எழுப்பி வழிபாடு செய்தான் என ஸ்தல வரலாறு.
இவ்வலாயத்தில் பசுக்களை பராமரித்து வந்த கேதாரி என்னும் இடையனை, பொய்க்கணக்கு எழுத தூண்டிய கணக்கனின் தவறான எண்ணங்களைப் பற்றி இறைவனிடம் விண்ணப்பிக்கின்றான் இடையன். கணக்கனின் தலையைக் கொய்ய சூலத்தை ஏவினார் இறைவன். சூலத்திற்கு குறுக்கே நிற்கலாகாது என வழிவிட்டு, நந்தியும் பலிபீடமும் ஒதுங்கி நின்றன என ஸ்தல வரலாறு.
சமணர்களுடன் மதுரையில் வாதம் செய்த திருஞான சம்பந்தர் போகமார்த்த பூண் முலையாள் என்ற நள்ளாற்று பதிகத்தைப் பாடி தீயிலிட்டபோது, அது வேகாமல் பசுமையாக பச்சை பதிகமாக திரும்பி வந்தது. சைவத்திற்கு பெருமை சேர்க்க காரணமாயிருந்த பதிகம் பெற்ற ஸ்தலம்.
புத்திர பாக்யம் வேண்டி இந்திரன் தவமிருந்து, நகவிடங்கரின் அருளால், ஜயந்தன் எனும் புத்திரனைப் பெற்றான். இதனால் நகவிடங்கரை புத்திர தியாகர் என்றும் கூறுவர்.
பார்கவ முனிவரின் சாபத்தைப் பெற்ற கலிங்க மன்னன் ஒருவன் காட்டானையாக மாறி திரிந்து பின் நாரதரின் யோசனைப்படி, இத்தலம் வந்து அஸ்வமேத யாகம் செய்து, சாபம் நீங்கப் பெற்றான்.
விடங்கர்: டங்கம் என்றால் உளி, விடங்கம் என்றால் உளி தீண்டாமல் உருக் கொண்டவர் எனப் பொருள்.
புத்திரப்பேறு வேண்டி, திருமால் - ப்ருகு மகரிஷியின் யோசனைப்படி, சோமாஸ்கந்தரை வழிபட்டு வந்தார். ஒரு க்ஷணமும் பிரியாது, சோமாஸ்கந்தரை பூஜித்து வந்தார் திருமால்.
புத்திர பாக்யம் வேண்டி திருமாலிடம் வந்த இந்திரனுக்கு தான் வழிபட்டு வந்த சோமாஸ்கந்தரை தந்தருளினார் திருமால்.
வாலாசுரன் எனும் அசுரன் தேவர்களை எல்லாம் வென்று தேவேந்திரனை போருக்கழைத்தான். இந்திரனால் அவனை வெல்ல முடியாமல் போனதால், வியாழனின் யோசனைப்படி, முசுகுந்த சக்ரவர்த்தியின் உதவியை நாடினான். எதற்கும் அஞ்சாத முசுகுந்தன் போரில் வாலாசுரனை தோற்கடித்து வெற்றி கொண்டான். வெற்றி பரிசாக திருமாலிடமிருந்து பெற்ற சோமாஸ்கந்தரை கேட்டான்.
அதை தர மனமில்லாத தேவேந்திரன், மயனின் உதவியுடன், அதைப் போலவே ஆறு மூர்த்திகளை உருவாக்கி, திருமாலிடமிருந்து பெற்றதையும் சேர்த்து, ஏழு மூர்த்திகளை முசுகுந்தனிடம் காண்பித்து இந்த ஏழு திருவுருவங்களில் நீ வேண்டுவது யாது எனக் கேட்டான்.
சிறந்த சிவபக்தனான முசுகுந்தனிடம், இறைவனே - இதனைக் கேள் என சுட்டிக் காட்டினார். இறைவனின் வழிகாட்டுதலால் சரியான மூர்த்தியை அடையாளம் காண்பித்த முசுகுந்தனின் அறிவாற்றலைக் கண்டு வியந்த இந்திரன், மயன் மூலமாக உருவாக்கிய ஆறையும் சேர்த்து ஏழு மூர்த்திகளையுமே முசுகுந்தனுக்கு பரிசாக தந்து விட்டான்.
இதுவே சப்த விடங்கர்கள் உருவானதற்கான புராண குறிப்புகள்.