தஞ்சகன், தாரகன், தண்டகன் ஆகிய மூன்று அசுரர்களின் கொடுமைப் பிடியிலிருந்து காக்கும்படி, பராசரர் இறைவனிடம் பிரார்த்திக்கின்றார். இவர்களை அழித்து வருமாறு காளி தேவியிடம் இறைவன் பணிக்கிறார். தாரகன் காளியின் மீது எய்த அம்புகளைத் தன் உடலில் ஏற்றுக்கொண்டு, உக்ர வடிவம் கொண்டு தாரகனை வதைக்கிறாள் காளி தேவி. தஞ்சகன் அழிந்ததால் இவ்வூர் தஞ்சாவூர் என்றானது.
இந்த உக்ர காளியைச் சாந்தப்படுத்த அருகே ஆனந்தவல்லியைப் பிரதிஷ்டை செய்தார் பராசரர் என்பர்.
இழந்த செல்வங்களை எல்லாம் மீண்டும் அடைய வேண்டி, குபேரன் இத்தலத்தில் அனுதினமும் சிவபூஜை செய்து வழிபட்டுள்ளான். இதனால் மகிழ்ந்து குபேரனுக்குக் காட்சி தந்தருளிய சிவபெருமான், அவன் இழந்த செல்வங்களையும் தந்து செல்வங்களுக்கு அதிபதியாக்குகிறார். குபேரனுக்குத் தஞ்சம் தந்ததால் தஞ்சாவூர் என்றானதாகவும் கூறுவர்.
பெரிய கோவிலுக்காக நர்மதாவிலிருந்து லிங்கம் எடுத்து வரும் சமயம், இவ்விடம் வந்ததும் வாகனம் நகராமல் நின்றது. ஆறு மாத காலம் இத்தலத்தில் வைத்துப் பூஜித்து, பின்னர் அங்கே எடுத்துச் சென்றதாகக் கூறுகின்றனர். விண்ணவர்கள் ஆண்ட கரை எனப் பெயர் கொண்டிருந்தது மருவி தற்போது வெண்ணாற்றங்கரை என அழைக்கின்றனர்.
ஐப்பசி மாத அமாவாசை நாளில் குபேரன் இழந்த தன் செல்வங்களை இறைவனருளால் மீண்டும் பெற்றதாக ஐதீகம். எனவே வருடந்தோறும் அந்நாளில் மகா குபேர யாகம் நடத்துகின்றனர்.