மூலஸ்தானத்தில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயஸ்வாமி, நெடிதுயர்ந்த திருமேனி கொண்டு, நின்ற திருக்கோலத்தில் விஸ்வரூப தரிசனம் தருகின்றார். கிழக்கே கருடனின் திருமுகம், வடக்கே நரசிம்மரின் திருமுகம், தெற்கே வராஹரின் திருமுகம், மேற்கே ஹயக்ரீவரின் திருமுகம், மற்றும் ஆஞ்சநேயரின் திருமுகம் - என பஞ்ச முகங்களுடனும், பத்துக் கரங்களுடனும் சேவை சாதிக்கின்றார்.
36 அடி உயரமும், 15 அடி அகலமும், 70 டன் எடையும் கொண்ட அழகிய திருமேனியை, ஒரே கல்லில் உருவாக்கி ஸ்தாபனம் செய்துள்ளனர்.
ஆஞ்சநேயரின் சிலைக்கு அடியில் பஞ்சமுக ஹனுமத் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். சாஸ்திரப்படி உருவாக்கி ஸ்தாபித்துள்ள இந்த யந்திரத்தை, பல புண்ய க்ஷேத்ரங்களுக்கு எடுத்துச் சென்று, விசேஷ பூஜைகள் செய்து, பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. ஆஞ்சநேயரை பிரத்யட்சமாக வர தனி பிரகாரம் உள்ளது.
வலச்சுற்றின் சந்நிதியில் ஜயமங்கள வலம்புரி ஸ்ரீ மஹா கணபதியை தரிசித்து ஆசி பெறலாம்.
அடுத்து வரும் சந்நிதியில் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தரும் ராமர்-சீதா-லக்ஷ்மணன்-பரதன்-சத்ருக்னன், ஆஞ்சநேயர், சுக்ரீவன், விபீஷணன், அங்கதன் மற்றும் ஜாம்பவான் ஆகியோரையும், சந்நிதியின் எதிரே பெரிய திருவடியையும் சேவிக்கலாம்.
ஸ்ரீ ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைத்துள்ளனர். சந்தன மரத்தில் உருவாக்கப்பட்டு தங்க கவசம் பூட்டி, பல ஸ்தலங்களுக்கு எடுத்து சென்று, பூஜித்து, கொண்டு வந்து வைத்துள்ளனர். பக்தர்கள் தொட்டு வணங்க கருங்கல் பாதங்களும் இருக்கிறது.
சேதுபாலம் கட்டியபோது உபயோகப்படுத்தப்பட்ட மிதக்கும் கற்களை வைத்துள்ளனர்.
பலவிதமான நைவேத்யங்களை, வெவ்வேறு வேளைகளில், ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்கின்றனர். இரவு வேளையில் ஹனுமத் சூரணம் நைவேத்யம் செய்கின்றனர்.
கோவில் மணியோசை எட்டு கி.மீ தூரத்திற்கு கேட்குமாம்.