குரு பகவானின் சாபத்தால் தனது கலைகளை இழந்த சந்திரன் இத்தலத்திற்கு வந்து ஒரு தீர்த்தத்தை அமைத்து, இவ்விறைவனை வழிபட்டு தனது சாபத்தைப் போக்கிக் கொண்டான் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இதனால் இவ்விறைவன் சோமநாத சுவாமி என்ற திருநாமம் கொண்டார்.
ஒரு காலத்தில் இப்பகுதி பசுக்களின் மேய்ச்சல் இடமாக இருந்தபோது, அப்பகுதியை ஆண்ட அரசன் ஒரு ஆலமரத்தடியில் பசுக்கள் பால் சொரிவதைக் கண்டான். அதன் காரணத்தை அறிய மரத்தை வெட்ட முற்பட்டபோது, குருதி பெருகுவதைக் கண்டு பயந்து வெட்டுவதை நிறுத்திவிட்டான். அன்றிரவு அவனது கனவில் தோன்றிய இறைவன், தாம் ஆலமரத்தின் தூரில் இருப்பதாகத் தெரிவித்தார் எனவும், அதை வெளிக்கொணர்ந்து அரசன் ஆலயம் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
ஆலமரத்து தூரிலிருந்து இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால், இவ்வூர் ஆலந்தூர் என்றழைக்கப்பட்டு, பின்னாளில் மருவி ஆற்றூர் என்றானதாகக் கூறப்படுகிறது.