பூமியைத் தூக்கிக்கொண்டு போய் பாதாளத்தில் ஒளித்து வைத்த இரண்யாட்சகனை சம்ஹாரம் செய்து, பூமியை மீட்டு வந்த பெருமாள், போர் புரிந்ததனால் சிவந்த கண்களைப் பெற்றிருந்த காரணத்தால் செங்கண்மால் எனும் திருநாமம் பெற்றதாக ஸ்தல வரலாறு. போர் புரிந்த களைப்பை போக்கிக்கொள்ள இத்தலத்தில் பள்ளி கொண்ட பெருமாளாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அனந்தாழ்வானுக்கும், நாச்சியாருக்கும் பிரத்யட்சமான பெருமாள், தன்னை தரிசிப்பவர்களுக்கு, அரசாளும் வல்லமை தந்து அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேற வரமும் அளிப்பவர் என்று திருமங்கை ஆழ்வார் தனது பாசுரத்தில் விளக்கியிருக்கிறார். ஸ்ரீரங்க ரங்கநாதருக்கு ஒப்பானவர் என்று போற்றுவார்கள். இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்று, நாங்கூர் திவ்ய தேசங்களுள் ஒன்று, ஏகாதச ருத்ர பீடங்களுள் சர்வ பீடம்.
11 திவ்ய தேச ஸ்தலங்கள் தோன்றிய வரலாறு: சிவபெருமானை யாகத்திற்கு அழைக்காமலும், யாகத்தின் அவிர்பாகத்தைத் தராமலும், அவமானப்படுத்தி தட்சன் செய்யும் யாகத்திற்கு அழைப்பின்றி போனாள் பார்வதி. எவ்வளவு அறிவுரைகள் கூறியும், காதில் வாங்கிக்கொள்ளாமல் செருக்குடன், யாகத்தைத் தொடர்ந்து நடத்தினான் தட்சன். யாகத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தில், யாக குண்டத்தில் குதித்து, தன் ஸ்தூல உடலை அழித்துக்கொண்டாள் பார்வதி. நடந்தவை அனைத்தையும் அறிந்துகொண்ட சிவபெருமான் ஆவேசம் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார். உக்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கையில், அவரது ஜடாமுடி தரையில் பட்டு, அதிலிருந்து ஒரு சிவன் தோன்றி, ருத்ர தாண்டவம் ஆடினார். இவ்வாறாக மூலசிவனின் ஜடாமுடி தரையில் படும்போதெல்லாம் ஒரு சிவன் தோன்றி ருத்ர தாண்டவம் ஆட, முடிவாக 11 ருத்ரமூர்த்திகள் ஆடிக்கொண்டிருந்தனர். 11 சிவ வடிவங்கள் கோபாவேசமாக ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தால் உலகிற்கு அழிவு என கலக்கமுற்று பயந்த முனிவர்கள், திருமாலைச் சரணடைந்தனர். திருமாலும் 11 வித வடிவங்களில் தோன்றி, 11 சிவ தாண்டவர்கள் முன் நின்று, அவர்களை சாந்தப்படுத்தினார் என ஸ்தல வரலாறு. சினம் தணிந்த சிவபெருமான், ஒவ்வொரு வடிவத்தையும் - ஒருவருக்குள் ஒருவராகச் செலுத்தி, இறுதியில் ஒரே வடிவமாக நின்றார். தன்னைப் போலவே ஏகாதச வடிவங்கள் கொண்டு திருமாலும் எழுந்தருள வேண்டுமென சிவன் கோரியதால், இத்தலத்தில் 11 பெருமாள்களாக திருமால் சேவை சாதிக்கிறார் என ஸ்தல வரலாறு. ஸ்ரீ வண்புருஷோத்தமம், ஸ்ரீ வைகுந்த விண்ணகரம், திருத்தெற்றியம்பலம், திருஅரிமேய விண்ணகரம் ஆகிய திவ்ய தேசங்களில் மணவாள மாமுனிகள் மங்களாசாசன உற்சவத்திற்கு எழுந்தருளுகிறார்.