முருகப்பெருமானை கவனியாது அலட்சியம் செய்த பிரம்மனிடம் தர்க்கம் செய்து, அவரிடமிருந்து உரிய பதில் வராததால் பிரம்மனை சிறை பிடிக்கிறார் முருகன். பிரம்மனை விடுவிக்கக் கோரி தேவர்கள் வந்தபோது, அவர்களைத் திருப்பி அனுப்பி விடுகிறார். இறைவன் (சிவன்) நேரில் சென்று முருகனுக்கு எடுத்துரைத்து பிரம்மனை விடுவிக்கச் செய்தார்.
தந்தையின் கட்டளையை மீறியதற்கு பிராயச்சித்தம் வேண்டி சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். அந்த சிவலிங்கமே தேவசேனாபதீஸ்வரர் என ஸ்தல வரலாறு.
இவ்வாலயத்து கச்சியப்ப சிவாச்சாரியாரைக் கொண்டு "திகடச் சக்கரம்" என அடியெடுத்துக் கொடுத்து கந்த புராணம் எழுதுமாறு முருகன் பணித்த ஸ்தலம்.
பிரளய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மார்க்கண்டேய முனிவர், திருமாலைக் கண்டு உலகத்து பொருட்கள் எல்லாம் எங்கே போயின என வினவ, 'என் வயிற்றுக்குள் அடக்கம்' என்று கூறிய திருமாலை இகழ்ந்தார் முனிவர். இதனால் மனம் வருந்திய திருமால் பிலாகாஸத்து அன்னையை வழிபட்டு, பின்னர் இங்கு வந்து உருகும் உள்ளத்தான் என்ற திருநாமம் பெற்றார் என ஸ்தல வரலாறு.