மூலவர்: கேதாரீஸ்வரர், அம்பாள்: பார்வதி தேவி. மூலவர்: ஸ்ரீநிவாசப் பெருமாள், தாயார்: மஹாலட்சுமி.
மதிற்சுவரை ஒட்டி வரசித்தி விநாயகர் எழுந்தருளியுள்ளார். அடுத்துள்ள சந்நிதியில் சித்தி-புத்தி விநாயகர் எழுந்தருளி ஆசி வழங்குகின்றார். வள்ளி-தெய்வயானை உடனாய சுப்ரமண்யரை தரிசிக்கலாம்.
முன்மண்டபத்திலுள்ள பிரதான கருவறையில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி அருள் புரிகின்றார் கேதாரீஸ்வரர். பக்கத்து சந்நிதியில் பார்வதி தேவி எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.
முன்மண்டபத்து மறு கோடியிலுள்ள பிரதான கருவறையில் மூலவராக ஸ்ரீநிவாசப் பெருமாள் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி - பூ தேவி தேவியர்கள் உடன் உள்ளனர். பெருமாள் மூலவராகவும் உற்சவராகவும் சேவை சாதிக்கின்றார். மஹாலட்சுமித் தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார்.
எதிரே உள்ள சந்நிதியில் ஸ்ரீ ராமர், சீதா பிராட்டி, லக்ஷ்மணன், ஹனுமன் ஆகிய மூர்த்தங்கள் சேவை சாதிக்கின்றனர். ஆஞ்சநேயர் தனி சந்நிதி கொண்டுள்ளார். லட்சுமி நரசிம்மர், தும்பிக்கை ஆழ்வார் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம்.
வலச்சுற்றில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நடராஜர், லட்சுமி நரசிம்மன், தும்பிக்கை ஆழ்வார் மற்றும் நவகிரகங்களை தரிசிக்கலாம். தனி சந்நிதி கொண்டுள்ள காசி விஸ்வநாதர் திருவுருவம் அழகாக இருக்கின்றது. மேலேயுள்ள தாரா பாத்திரத்திலிருந்து நீர்த்துளிகள் லிங்கத்தின் மீது விழும் வகையில் அமைத்துள்ளனர்.