பதினெண் சித்தர்களில் ஒருவரான கோரக்க சித்தர் இத்தலத்தில் நீண்ட காலம் தவம் மேற்கொண்டார். அவருக்கு பிரத்யட்சமான இறைவன் என்பதால் சித்தநாதர் எனப் பெயர் கொண்டார். ஆழ்வாரின் பாசுரப்படி சிவபெருமானுக்கு கபால விமோசன சித்தி இத்தலத்தில் நிறைவேறியதால் இங்குள்ள சுவாமி சித்தநாதர் எனப் பெயர் பெற்றார் என்றும் கூறுவர்.
நீர் வளம், நில வளம், ஊர் வளம் இம்மூன்றிலும் சிறந்த இவ்வூர் நறுமணம் மிகுந்த பூக்களைக் கொண்ட சோலைகளை உடையது. பூக்களிலிருந்து நறை அதாவது தேன் சொரிவதால் நறையூர் எனப் பெயர் கொண்டது.
துர்வாச முனிவரின் சாபத்தைப் பெற்று நரையான் பறவை வடிவம் கொண்ட ஒருவன், இவ்விறைவனை வேண்டி, நரன் வடிவம் பெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
இத்தலத்தைச் சேர்ந்த மேதாவி மகரிஷிக்கு புத்ரியாக வளர்ந்த மஹாலட்சுமி இங்கு கன்னியாக உலா வந்துள்ளார். பார்வதி - பரமேஸ்வரன், மஹாலட்சுமியை மகளாக பாவித்து விஷ்ணுவிற்கு மணம் செய்து வைத்தனர்.
திருஞானசம்பந்தருக்கும் சுந்தரருக்கும் இத்தலத்தில் பிட்சாடனராக தரிசனம் தந்ததால் இவ்விறைவன் கங்காளதேவர் என அழைக்கப்படுகின்றார்.
இங்குள்ள நடராஜர் திருவாதிரை உற்சவத்தின்போது ஜடாமுடி விரித்து ஆடும் ஆனந்த நடனம் பிரசித்தி பெற்றது.
புதன் கிழமை புத ஹோரையில் சித்தநாதேஸ்வரருக்கு சந்தனக்காப்பு செய்வித்து, பித்ரு தோஷ பரிகாரம் தேடிக் கொள்ளும் பக்தர்கள் அனேகம்.
தேவாரத் திருத்தலம்.