பிரளய வெள்ளம் பொங்கி எழுந்து திரண்டு, எல்லா இடங்களிலும் பாய்ந்து வருகையில், இத்தலத்தில் மட்டும் புக முடியவில்லை. இங்கு வீற்றிருக்கும் விநாயகர் வெள்ள நீரை தன் வசப்படுத்தி தடுத்து நிறுத்தியதால் பிரளயம் காத்த விநாயகர் என்ற பெயரைக் கொண்டார். நீருக்கு புறம்பாக நின்றதால் இவ்வு+ர் புறம்பயம் என்ற பெயரைக் கொண்டது.
அரதனகுப்தன் எனும் வணிகன் நற்பண்புகளோடு வாழ்ந்து வருபவன். வணிகனது மாமன் அவனது மகளை மணந்து கொள்ளும்படி அடிக்கடி கேட்டு வந்தான். தான் ஏற்கனவே திருமணமானவன் என்று மாமனுக்கு பதிலுரைப்பான் வணிகன்.
ஒரு நாள் அவனது மாமனும், மாமனின் மனைவியும் இறந்து விட்டனர். மதுரையில் தனித்து விடப்பட்ட மாமன் மகள் மீது இரக்கப்பட்டு அவளுக்கு நல்வாழ்வு தரும் எண்ணத்தில் மதுரைக்கு சென்று, அவளை அழைத்துக் கொண்டு ஊர் திரும்பினான் வணிகன்.
திருபுறம்புயம் அருகே பயணித்துக் கொண்டிருந்தபோது இரவு நேரம் நெருங்கியபடியால், அங்கேயே தங்க முடிவெடுத்தனர். வன்னிமரம், கிணறு, சிவலிங்கம் ஆகியன இருக்கக் கண்டு, இது உகந்த இடமென தங்கி அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு விட்டு உறங்கினர்.
உறங்கிக் கொண்டிருந்த வணிகனை பாம்பு ஒன்று தீண்ட, விஷம் தலைக்கேறி இறந்து விடுகிறான் வணிகன். கூட வந்த மாமன் மகள் கதறி அழுகிறாள்.
அவ்வழியே பயணித்துக் கொண்டிருந்த ஞானசம்பந்தர் அப்பெண்ணின் கூக்குரல் கேட்டு, அருகே சென்று, நடந்தவைகளை கேட்டறிந்தார். அப்பெண்ணின் துயரை நீக்குமாறு வேண்டி, இறைவனிடம் முறையிட்டு பதிகம் பாடுகிறார். தீண்டிய நாகமே வந்து நஞ்சை உறிஞ்சி எடுத்ததால், வணிகன் உயிர் பிழைத்து எழுந்தான்.
வன்னி மரத்தடியில் ஈஸ்வரனை சாட்சியாக வைத்து அப்பெண்ணுக்கு தாலி கட்டி மண முடிக்கிறான் வணிகன்.
ஊர் திரும்பியதும் அவனது முதல் மனைவியும், ஊர் மக்களும் இந்த பெண்ணை நிராகரித்து, அவமதித்து ஏளனம் செய்தனர். தாலி கட்டிக் கொண்ட மனைவி என யாரும் நம்பவில்லை. மனம் வருத்தமுற்ற இருவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். வன்னி மரத்தையும், கிணற்றையும் அழைத்துக் கொண்டு அங்கு வந்த சிவபெருமான் எங்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர் என சாட்சி சொன்னார். இதனால் சாட்சி நாதேஸ்வரர் என்ற பெயரைக் கொண்டார்.
தேவாரத்திருத்தலம்