திரிபுராந்தகப் போரில், சிவபெருமானது கரத்தில் அம்பாக திகழ்ந்த அதி உக்கிர நரசிம்மர், திரிபுர தகனம் முடிந்ததும், களைப்பைப் போக்கிக் கொள்ள, இங்கு சயனக் கோலத்தில் இருப்பதாக ஐதீகம். இவருக்கு க்ஷேத்ர நிவாசன் என்ற திருநாமமும் உண்டு.
வைகாசி மாதம், வீரட்டேஸ்வர ஆலயத்தின் பெருவிழாவின்போது, சரநாராயணப் பெருமாள் கருட வாகனத்தில் அவ்வாலயம் சென்று, தேர்சக்கரத்தின் அருகில் நிற்பார். இவர் மீது, சிவபெருமானின் சந்திரகணை சார்த்தப்பட்டு, அதில் மந்திரபூர்வமாக எழுந்தருளச் செய்கின்றனர். பின்னர் சந்திரகணை, சிவபெருமானின் கரத்தில் வைக்கப்படுகிறது.
பிறகு திரிபுர தகன ஐதீகத் திருவிழா நடைபெறும். இருவருக்கும் ஏக கால தீபாராதனை நடைபெறும்.