விபீஷணன் சரணாகதி அடைந்த இடமும், அவனுக்கு ராமர் அடைக்கலம் தந்த இடமும் இதுவே. இலங்கை மன்னன் ராவணனை போரில் வென்று இலங்கையைக் கைப்பற்றிய ராமர், ராவணனின் தம்பி விபீஷணனுக்கு இலங்கை மன்னனாக முடி சூட்டிய இடமாகும்.
தனுஷ் என்றால் வில், கோடி என்பது முனையைக் குறிக்கும். வில்லின் முனை என்பதே தனுஷ்கோடி. சாட்டிலைட் வழியாக பார்த்தால் தனுஷ்கோடி - வில்/அம்பு கொண்டு ஒருவர் இருப்பது போன்ற தோற்றம் கொண்டுள்ளது. தலை, ஜடாமுடி, மூக்கு, வில்லின் நாணை இழுத்து அம்பு விடுவது ஆகியனவற்றைக் காணலாம்.
தனுஷ்கோடி என்றால் ஒரு கோடி வில் எனவும் பொருள் கூறப்படுகிறது. அதாவது ராமபாணத்தின் சக்தி ஒரு கோடி வில்களிலிருந்து எய்யப்படும் அம்புகளுக்குச் சமம் என்பர். ராமர் தனது தனுஷை (வில்லை) ஊன்றி ஒரு தீர்த்தத்தை உண்டாக்கியதால் தனுஷ்கோடி எனப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
விஸ்வகர்மாவின் மகனான நளன் எனும் வானரம் மேற்பார்வையிட, மற்ற வானரங்களின் துணையுடன் ஸ்ரீ ராமர் கட்டிய பாலம், சேதுக்கரையிலிருந்து 1 கி.மீ. கடலுக்குள் பயணித்தால் கடலுக்கடியில் உள்ளது. இதை நள சேது என்பார்கள்.
இந்த பாலம் 100 யோஜனை நீளமும் 10 யோஜனை அகலமும் கொண்டது. அதாவது (ராமசேது - தனுஷ்கோடி - தலைமன்னார்/இலங்கை இணைப்பு).
இதில் வானர சேனையுடன் இலங்கை சென்று சீதா பிராட்டியை மீட்டுக் கொண்டு வந்ததாகவும், ராவண யுத்தம் முடிந்த பின்னர் இந்த பாலத்தை ஸ்ரீ ராமரே அம்பு விட்டு கடலுக்கடியில் ஆழ்த்திவிட்டார் எனவும் புராணக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த இடத்தைப் பார்க்க ஆசைப்படுபவர்கள் இங்குள்ள மீனவர்களின் உதவியுடன் படகில் சென்று பார்க்கலாம். இதை 'ஆடம்ஸ் பிரிட்ஜ்' என்றும் அழைக்கிறார்கள்.
ராமேஸ்வரத்தில் பித்ரு சடங்குகளை முடித்துக் கொண்டு பிறகு தனுஷ்கோடி செல்ல வேண்டும். இங்கு சேது ஸ்நானம் செய்வோர்க்கு சகல பாவங்களும் நீங்கும்.
கங்கை கரையில் உயிரை விடுவதும், நர்மதைக் கரையில் நோன்பிருப்பதும், குருக்ஷேத்திரத்தில் தானம் செய்வதும் சிறப்பு என்பார்கள்.
இந்த மூன்று புண்ணியங்களையும் ஒரே இடத்தில் வழங்குவது தனுஷ்கோடியே. இங்கு பித்ருக்களின் அஸ்தியைக் கரைப்பது, நீத்தார் கடன் தீர்ப்பது ஆகியன விசேஷமாக கருதப்படுகிறது.