காரைக்கால் அம்மையாரின் கண்களுக்கு இந்த ஊரே சிவமயமாக தெரிந்ததால், தனது கால் பதிக்கலாகாது என எண்ணிய காரைக்கால் அம்மையார் தனது தலையாலேயே நடந்தார். காரைக்கால் அம்மையார் தலையால் நடந்த பூமியில், தனது கால் படக்கூடாதே என ஞானசம்பந்தரும் ஆலங்காட்டில் கால் வைக்காது, பழையனூரிலேயே தங்கி இருந்தார் என ஸ்தல வரலாறு.
தரிசனன் எனும் வணிகன் ஒருவன் காசியிலிருந்தபோது ஒரு பெண்ணை மணந்து கொண்டு சில காலம் உடன் வாழ்ந்து விட்டு பின் அவளை வஞ்சித்து வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டான். இதைக் கண்டுபிடித்து விட்ட அவனது முதல் மனைவியையும் அவளது தம்பியையும் கொன்று விட்டான்.
கொலை செய்யப்பட்ட அவனது முதல் மனைவி பேயாக மாறி அவனை பழி வாங்க இவ்வூரில் காத்திருந்தாள். நீண்ட காலத்திற்கு பிறகு இவ்வூர் வழியே வந்த வணிகனை, பழையனூர் நீலி எனப்படும் காத்திருந்த பேய் அவனை துரத்தியது.
அவனது உயிரை காப்பதாக வாக்கு கொடுத்து அவனுக்கு அடைக்கலம் தந்தனர் இவ்வூர் வேளாள மக்கள்.
ஆனால் பழையனூர் நீலி வணிகனை கொன்று பழி தீர்த்துக் கொண்டாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது போனதால் இவ்வூர் வேளாள மக்கள் தீப்பாய்ந்து தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர்.
அவர்களது நினைவாக இங்கு தீப்பாய்ந்த வேளாளர்கள் மண்டபம் உள்ளது.