உரோமச முனிவர் தமது குருவான அகத்தியப் பெருமானிடம், சிவ கடாட்சம் பெற்று முக்தியடைய வழி கேட்டார்.
அதற்கு அகத்தியர், "நீ பொருநை ஆற்றின் கரை வழியாக சங்கு முகம் வரைக்கும் செல். உனக்கு வழி காட்ட ஆற்று நீரில் ஒன்பது மலர்களை விடுகிறேன். ஒவ்வொரு மலரும் எந்த இடத்தில் ஒதுங்குகிறதோ, அங்கெல்லாம் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபடு" என்றார். (சங்கு முகம் என்பது பொருநை ஆறு கடலில் சங்கமிக்கும் இடம்)
அகத்தியர் கூறியபடியே உரோமச முனிவரும் ஒவ்வொரு பூவும் கரை ஒதுங்கிய இடங்களில் (ஆற்றின் இரு கரைகளிலும்) சிவலிங்கம் நிறுவி வழிபட்டார். ஏழாவது மலர் ஒதுங்கிய இடமே தென் திருப்பேரை.
ஒவ்வொரு ஜாதகத்திலும் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட கிரகங்களின் தசை ஆட்சி புரியும். ஒவ்வொரு தசைக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதி. ஒவ்வொரு தசையின்போதும் எந்தக் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் நற்பயன் பெறலாம் என விளக்க, சிவபெருமான் அந்தந்த கிரகங்களாக இருந்து அருள் புரிவதாக ஐதீகம்.
அதன்படி இங்கு புதனின் அம்சமாக இறைவன் அருள் புரிகின்றார்.
இவ்வாலயத்தின் சிறப்பை விளக்கும் வகையில் செவி வழி கதை ஒன்று நிலவுகிறது. ஆங்கிலேய கலெக்டர் ஒருவர் இவ்வாலயத்து தென்னை மரத்திலிருந்து இளநீர் பறித்துத் தருமாறு பணித்தாராம். "சிவன் சொத்து பறிக்கலாகாது, அபிஷேகத்திற்கு மட்டும்தான் பறிப்போம்" என அர்ச்சகர் தெரிவித்தாராம்.
"கோவில் தேங்காய்க்கு கொம்பா முளைத்திருக்கிறது? பறித்து வா" எனக் கட்டளையிட்டாராம் கலெக்டர்.
வேறு வழியின்றி பறித்துப் போட்டார்களாம். தேங்காயைப் பார்த்ததும் திடுக்கிட்டாராம் கலெக்டர். அதில் மூன்று கொம்புகள் முளைத்திருந்ததாம். (அம்பாள் சந்நிதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று இருக்கிறது)