பிள்ளைக்கறி சமைத்துப் போட்டு, தன்னை விட சிவபக்தி உள்ளவர் வேறு எவருமில்லை என்ற கர்வத்தில் இருந்த சிறுத்தொண்டரை, திருச்செங்காட்டான்குடியிலிருந்து அழைத்துக் கொண்டு, இவ்வூருக்கு வந்தார் சிவபெருமான்.
சிவபக்தியில் சிறந்து விளங்கிய சீலவதி அம்மையாரின் வீடு இவ்வூரிலுள்ளது. சிவனடியார்க்கு உணவு அளித்த பின்னரே, அம்மையாரும் அவரது புதல்வனும் சாப்பிடுவது வழக்கம். சிவனடியார் வேடம் பூண்டு சிவபெருமானும், சிறுத்தொண்டரும் சீலவதி அம்மையார் வீட்டிற்கு வந்தனர். "நீராடி விட்டு வாருங்கள் - உணவு பரிமாறுகிறேன்" என்றார் அம்மையார்.
சித்திரை பரணி கூடிய அமாவாசை நாளானதால், பித்ருக்களுக்கு உகந்த விசேஷ உணவினை தயாரித்திருந்தார் அம்மையார். அதிதி வரும் வரை காத்திருக்கும் பொறுமையில்லாத சிறுவன், அம்மாவிற்கு தெரியாமல் எடுத்து சாப்பிட்டு விடுகிறான். சிவனடியார்களுக்கு தர வேண்டியதை மகன் உண்ணுவதைப் பார்த்த அம்மையார் உலக்கை எடுத்து பிள்ளையை அடித்து விடுகிறார். மகனின் உயிர் பிரிந்து விடுகிறது. இறந்த மகனை பாயில் சுருட்டி பரணில் வைத்து விட்டு, உணவு எச்சில் படுத்தப்பட்டதால், அவசர அவசரமாக வேறு உணவு தயாரித்து வைத்துக் கொண்டு, சிவனடியார்களுக்காக காத்திருந்தார் அம்மையார்.
சாப்பிட உட்கார்ந்த சிவனடியார்கள், "உங்கள் மகன் இல்லாமல் சாப்பிட மாட்டோம்" என்று பிடிவாதம் செய்தனர். "பேசாமல் சாப்பிடுங்கள், இல்லையென்றால் என் மகனை அடித்த உலக்கையால் உங்களையும் அடித்து விரட்டுவேன்" என்று கோபித்தார் அம்மையார். சிவனடியாராக வந்த சிவபெருமான் சிரித்தார். "சரியான கழுக்காணியாக இருக்கிறாயே அம்மா" என்றார் சிவபெருமான். (கழுக்காணி என்றால் உலக்கை என்று பொருள்).
இவ்வளவு விசேஷங்களை ஸ்தல வரலாறாக கொண்ட இத்தலம் செப்பனிட வேண்டிய நிலையிலுள்ளது.
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவிலின் உபகோவிலாக உள்ளது.