கௌதமரின் மனைவி அகலிகை மீது மோகம் கொண்ட இந்திரன், அவளை அடையும் தகாத எண்ணம் கொண்டு, கௌதம முனிவரின் உருவத்தில் சென்றான். இந்த இழிசெயலைச் செய்ய முற்பட்டதால், கௌதமரின் சாபம் பெற்று, சாப விமோசனம் வேண்டி இத்தலம் வந்தான்.
இங்கு மணலினால் சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து பூஜை செய்து வழிபட்டு வந்தான். "இனி பெண்களை ஏறெடுத்துப் பார்க்க மாட்டேன். செய்த பிழையைப் பொறுத்தருளுங்கள்" என்று அழுது புலம்பினான். பின்னர் லிங்கத்தைக் கையினால் எடுத்து நகர்த்தி வைக்க முற்படும்போது, கை விரல்களின் அடையாளங்கள் லிங்கத் திருமேனியில் பதிந்ததால் ஸ்வாமிக்கு கைச்சின்னநாதர் என்ற பெயர் வந்தது. கைச்சின்னம் என்ற பெயருற்ற இவ்வூர் நாளடைவில் மருவி கச்சனம் என்றானது.
ஐராவதத்தின் தந்தங்களைக் கொண்டு வெள்வளை செய்து அம்பாளுக்கு சமர்ப்பித்துள்ளான் இந்திரன். இதனால் அம்பாளுக்கு வெள்வளை நாயகி எனப் பெயர் வந்தது.
தியாகராஜர் உற்சவராக இந்திரனுக்குக் காட்சி தந்த ஸ்தலம்.
இது ஒரு தேவாரத் திருத்தலம்.