எமன் என்னைக் கொண்டு போகும்முன் உமது திருவடியை எனது சிரசில் வைக்க வேண்டும் என்று சிவபெருமானிடம், திருசக்திமுத்த தலத்தில் பிரார்த்தித்துக் கொண்டார் அப்பர் பெருமான். திருநல்லூருக்கு வரும்படி பணித்தார் இறைவன். நல்லூருக்கு வந்த திருநாவுக்கரசர் இறைவன் முன் பணிந்து எழுந்து திருவடியைப் பெற்றார் என தல வரலாறு. எனவே அப்பர் பெருமான் திருவடி தீட்சை பெற்ற தலம் என்ற சிறப்பை பெற்ற தலம்.
இதனால் இங்கு சிவபெருமானின் திருவடி பதித்த சடாரியை பக்தர்களுக்கு சாத்தும் வழக்கத்தை கடைப்பிடிப்பது சம்பிரதாயமாக உள்ளது.
அமர்நீதி நாயனாரை சிவபெருமான் ஆட்கொண்டு அவருக்கும், அவரது மனைவி மற்றும் மைந்தனுக்கும் முக்தி அருளிய தலம். இவர்களுடைய விக்ரகங்கள் உற்சவ மூர்த்தங்களோடு உள்ளன. ஐராவதம் இவ்விறைவனை வழிபட்டு சாபத்தைப் போக்கிக் கொண்ட தலம்.
ஆலயத்தின் முன்புறம் உள்ள சப்த சாகரம் எனும் திருக்குளம் விசேஷமானது. கர்ணனை ஆற்றில் விட்டுவிட்ட பாவத்தைப் போக்கிக் கொள்ள, குந்தி தேவியார், நாரதரின் யோசனைப்படி சிவபெருமானை வழிபட்டு பாவத்தைப் போக்கிக் கொண்டாள். குந்தி தேவியார் வேண்டியதால் ஏழுகடல் தீர்த்தத்தையும் பிரம்ம தேவன் வரவழைத்ததால் பிரம்ம தீர்த்தக் குளம் என்றும் கூறுவர். இக்குளத்தின் நான்கு திசைகளிலும் நான்கு வேதங்கள் இருப்பதாக கூறுகின்றனர்.
தியாகராஜரை திருவாரூருக்கு எடுத்து செல்லும்போது, முசுகுந்த சக்ரவர்த்தி, இத்தலத்தில் மூன்று நாட்கள் வைத்திருந்து பூஜித்தான் எனக் கூறப்படுகிறது. முன்நாளில் சோழர்களின் தலைநகரமாக இருந்ததாம்.
தேவாரத்திருத்தலம்.