சூரபத்மனின் படையாட்களான மலையன், மாக்கரன் என்னும் இரு அசுரர்கள், போரிலிருந்து தப்பித்து வந்து, இவ்வூருக்கருகே உள்ள மாகறலீஸ்வரரை வழிபட்டு வரங்கள் பெற்று, பலருக்கும் தீங்கு செய்து வந்தனர்.
காச்யப முனிவர் உலக நன்மை வேண்டி யாகம் ஒன்று ஆரம்பிக்கும் முன், யாகம் தடைபெறாமல் நடக்க இத்தலத்து கடம்பேசனை பூஜித்தார். கடம்பேசரின் கட்டளைப்படி முருகன் யாகத்திற்கு துணை நின்றார். கடம்பன் ஆகிய முருகன் வழிபட்ட மூர்த்தம் என்பதால் கடம்பேசர் எனப் பெயர் கொண்டார்.
யாகத்தை அழிக்க வந்த இரு அசுரர்களும் மாயப் போர் புரியவே, முருகன் அவர்களை வேலாயுதத்தால் அழித்தார் என ஸ்தல வரலாறு. அந்த வேல் நின்ற இடம் அருகேயுள்ள இளையனார் வேலூர் என இன்றும் விளங்குகிறது. அசுர சம்ஹாரம் முடித்த முருகவேள், தனது வேலாயுதத்தால் உண்டாக்கிய தீர்த்தமே சேய் - ஆறு, அதாவது சேயாறு எனப் பெயருற்று தற்போது செய்யாறு என அழைக்கப்படுகிறது. இந்த சேயாறு திருவோத்தூர், திருக்கடம்பர் கோவில் அனைத்தையும் கடந்து உத்தரவாகினியாக ஓடி, பின்னர் கிழக்கே பாய்ந்து மாகறல் எனுமிடம் வந்து, திருமுக்கூடலில் சேர்கிறதாம்.
பாண்டிய நாட்டைச் சேர்ந்த புத்திசேனன் என்பவன் தனது தந்தையின் அஸ்தியுடன் பயணிக்கையில், இத்தலமருகே வரும்போது அஸ்தியை தீர்த்தக்கரையில் வைத்துவிட்டு சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தான். தீர்த்த நீர் அஸ்தியில் பட்டு அவை மலர்களாக மாறின. எனவே இத்தலத்தை காசிக்கு நிகராக கூறுவர்.