கோபுர வாசல் வழி உள் நுழைந்ததும் நாம் காணும் வண்ண சுதை சிற்பமான தசக்ரீவ ராவணன் கயிலையங்கிரியைத் தாங்கியபடி இருப்பது அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மூலஸ்தான வாசலின் சிம்ம வாகனத்தில் அமர்ந்துள்ள பஞ்சமுக விநாயகர் ஒரு பக்கமும், வள்ளி-தெய்வயானை தேவியர்கள் உடனாய முருகப் பெருமான் மறு பக்கமும் காட்சி அளிக்கின்றனர்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் கச்சாலீஸ்வரர். பஞ்சாட்சரப் பெருமான் பஞ்சாசனப் பீடத்தில் அமர்ந்து தரிசனம் தருகின்றார். இந்தப் பஞ்சாசனப் பீடத்தைக் கருவறைக்குள் சென்று பார்க்க முடியவில்லையே என வருந்துபவர்களுக்காக முகமண்டப முகப்பில் சுதையாக வடிவமைத்துள்ளனர்.
முதலாவது ஆசனம் கூர்ம ஆசனம் (அதன் மேல்) இரண்டாம் ஆசனமாக அஷ்டநாக மண்டல நாகாசனம் (அனந்தன், வாசுகி, தக்ஷன், கார்க்கோடகன், சங்கன், குளிகன், பத்மன் மற்றும் மகாபத்மன் ஆகிய எட்டு சர்ப்பங்கள் கொண்ட நாகாசனம்), மூன்றாம் ஆசனமாக சிம்ம ஆசனம் (அதற்கு மேல்) நான்காம் ஆசனமாக பூதாசனம் (நான்கு யுகங்களைக் கொண்டது), ஐந்தாம் ஆசனமாக மலராசனம் (பத்மாசனம்) இதையே பஞ்சாசனம் என்பர்.
மூலவருக்குப் பின்னால் பஞ்சமுக சதாசிவ மூர்த்தி - மனோண்மணி அம்மையுடன் எழுந்தருளியுள்ளார். அர்ச்சகரிடம் கூறி வெளிச்சத்தில் காண்பிக்கும்படி கேட்டால் தீபாராதனை காட்டி தரிசனம் செய்து வைப்பார்.
மூலஸ்தான விமானத்தை 12 சூரிய ஸ்தம்பங்கள் தாங்குவதாக ஐதீகம்.
தெற்கு பார்த்த தனி சந்நிதியில் அன்னை சௌந்தராம்பிகை எனப்படும் அழகம்மை தரிசனம் தருகின்றாள். பெயருக்கேற்ற சௌந்தர்யம். மிகுந்த வரப்பிரசாதி.
நவகிரக சந்நிதியின் விமானத்தில் - 12 ராசிகள், 4 யுகங்கள், திதி, வாரம், கரணம், யோகம், சப்த மாதாக்கள், அஷ்ட வசுக்கள், சூரியன் மற்றும் அபிஜித்துடன் சேர்ந்து 28 நட்சத்திரங்கள் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. துர்க்கை சக்தி வாய்ந்தவளாக இருக்கிறாள். அறுபத்திமூவர்களின் திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன.
மூல கணபதி, மகாவிஷ்ணு, கோவிந்தராஜர், தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், அகோர வீரபத்ரர், சிவகாமி உடனாய நடராஜர், ஷண்முகர், ஆஞ்சநேயர், ஆதி சங்கரர், நால்வர், சண்டிகேஸ்வரர், பூரணா - புஷ்களா தேவியர்கள் சகித ஹரிஹரபுத்ரன், நந்திகேஸ்வரர், முந்திகேஸ்வரர் ஆகியோரை தரிசிக்கலாம்.
அப்பர் அடிகள் கண்ட கயிலாயக் காட்சியை நினைவூட்டும் சிற்பங்கள் அழகாக இருக்கின்றன.