சங்கிலி நாச்சியாரை மணக்க ஆசைப்பட்ட சுந்தரர், திருவொற்றியூரில், தியாகேசரையே தூது போகும்படி வேண்டி நிற்கிறார். ஏற்கனவே சுந்தரரின் திருமணத்தை திருவெண்ணைநல்லூரில் தடுத்து நிறுத்திய இம்முறை சங்கிலியாரிடம் தூது போனார்.
"ஆரூரில் ஒருத்தி இருக்க (பறவை நாச்சியார்), திருவொற்றியூரில் இருக்கும் நான் எப்படி மணப்பேன்?" என்று சிவனாரிடம் சங்கிலி நாச்சியார் வினவினாள். "உன்னை விட்டு பிரிய மாட்டேன் என்று சத்தியம் வாங்கிக் கொள்" என்று யோசனை கூறுகிறார் சிவனார்.
இந்த விபரங்களை அறிந்து கொண்ட சுந்தரர், திருவொற்றியூரிலேயே தங்கி விட்டால், பறவை நாச்சியாரின் கதி என்ன ஆவது? - தவிர திருவாரூர் தியாகேசனைப் பார்க்க முடியாமல் போய் விடுமே என்றெல்லாம் எண்ணிய சுந்தரர், இறைவன் லிங்கத் திருமேனியிலிருந்து விடுபட்டு, மகிழ மரத்தடி சென்று விட வேண்டும் என்றும், சத்தியம் செய்து முடித்ததும் மீண்டும் சந்நிதிக்கே திரும்பலாம் என்றும் கோரிக்கை விடுக்கிறார்.
இந்த சம்பாஷணையை சங்கிலி நாச்சியாரிடம் ஒப்பித்து விட்டார் சிவபெருமான்.
மறுநாள், மணம் புரிய சென்ற சுந்தரரை, மகிழ மரத்தடியில் நின்று சத்தியம் செய்யும்படி கூறிய சங்கிலி நாச்சியார், அதன்படி மகிழ மரத்தடியில் நின்று சத்தியம் வாங்கிக் கொண்டார். சிவபெருமானும் பிரத்யட்சமாகி அவர்களை வாழ்த்தினார்.
சங்கிலியாரை மணந்து திருவொற்றியூரிலேயே தங்கி இருந்த சுந்தரருக்கு, திருவாரூர் நினைவுக்கு வரவே, திருவொற்றியூர் விடுத்தார். எல்லையை தாண்டியதும், செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதால், கண் பார்வையை இழந்தார்.
வழிப்போக்கர்களின் உதவியுடன், தட்டுத் தடுமாறி, இவ்வூருக்கு (வெண்பாக்கத்திற்கு) வந்து சேர்ந்தார் சுந்தரர். "பிழைகளை பொறுத்து மன்னிக்காமல், கண் பார்வையை மறைத்து விட்டாயே - நீ இருக்கிறாயா கோவிலுக்குள்?" என சுந்தரர் கேட்க, "உளம் போகீர்" என அசரீரி ஒலித்தது. "ஆமாம் இருக்கிறேன், போய் வருகிறாயா?" என்று பொருள். "உனக்கு உதவியாக இருக்க, இந்த ஊன்றுகோலை வைத்துக் கொள்" என்கிறார் இறைவன்.
"கண் பார்வை கேட்டால் ஊன்று கோலை தருகிறாயே" என ஊன்றுகோலை திரும்ப வீசுகிறார் சுந்தரர். அது நந்தியின் மீது பட்டு, நந்தியின் வலது கொம்பு உடைந்து விடுகிறது.
"உளம் போகீர்" என இறைவன் கூறியது, உளம்பூதூர் என்றாகி, பின்னர் விலாம்பூதூர் என்று மருவியதாகக் கூறப்படுகிறது. தேவாரக் காலத்தில் ஆவணங்களில், கோவில் இருந்த இடம், திருவிலாம்பூதூர் என்று உள்ளது. சுந்தரர் குறிப்பிட்ட இடம் திருவெண்பாக்கம். தற்போதைய பெயர் பூண்டி.
ஸ்வாமிக்கும்-அம்பாளுக்கும் தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால், கண் பார்வை சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதாக அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.
தேவாரத் திருத்தலம்.