வீரன் எனும் வேடுவத் தலைவன் காட்டில் கிழங்கு தோண்டிக் கொண்டிருந்தபோது, புற்று ஒன்றின் மேல் வள்ளிக் கிழங்கு கொடியைக் கண்டான். புற்றைக் கடப்பாறைக் கொண்டு இடித்து, கொடியை வேரோடு அகழ்ந்தான். கடப்பாறை புகுந்த இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. கவலையுற்ற வேடுவத் தலைவன் மேலும் அகழ்ந்து பார்த்ததில், சிவலிங்கம் ஒன்று இருப்பது தெரிய வந்தது.
வீரை மரைக்காட்டில் தோன்றிய சிவலிங்கம் என்பதால் 'வீரசேகரர்' எனும் திருநாமம். கடப்பாறை பட்ட இடத்தில் தழும்பு ஒன்று உண்டானதால் 'முடித்தழும்பர்' எனும் திருநாமம்.
பாண்டிய மன்னன் சபையில் அந்தணன் வேடத்தில் வந்து சாட்சி சொல்லி, பொதிசோறு உண்டதால் சுவாமிக்கு புழுங்கலரிசி சாதம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. சோழ அரசன் ஒருவன் தனது வெண்குஷ்டம் தீர்த்த இவ்விறைவனுக்கு ஆலயம் எழுப்பினான்.
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஸ்தல புராணம் பாடியுள்ளார். அவருடைய சீடரான தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் உரை எழுதியுள்ளார். இவ்வூரில் வீரராகவப் பெருமாள் கோவிலொன்றும் உள்ளது.