தாராகாசுரன் எனும் அசுரன் செய்யும் கொடுமைகளிலிருந்து தப்பிக்க, தேவர்களும் முனிவர்களும் பிரம்ம தேவரிடம் சரணடைந்தனர். பார்வதி-பரமேஸ்வரனுக்குப் பிறக்கப் போகும் பிள்ளையால் அசுரன் அழிவான் என பிரம்மன் கூறினார்.
இமவானின் மகளான பார்வதியை மணக்க, அந்தணர் வடிவில் பூலோகம் வருகிறார் சிவபெருமான். ஏற்கனவே தலையில் ஒருத்தி இருப்பது தெரிந்தால், ஏதேனும் தடங்கல் ஏற்படுமோ என்ற எண்ணத்தில், இவ்வூரில் ஆஸ்ரமம் அமைத்து தவத்தில் இருந்த பாஸ்கர முனிவரிடம், தான் காசி சென்று திரும்பும் வரை அவளைப் பாதுகாக்க வேண்டும் எனப் பெண் வடிவில் இருந்த கங்கையை ஒப்படைத்துவிட்டுச் செல்கிறார்.
நித்யானுஷ்டானங்கள் செய்ய இத்தலத்தில் ஓடும் ஆற்றுக்குச் சென்ற பாஸ்கர முனிவர், பூஜை செய்யும் பாத்திரம் எடுத்துச் செல்ல மறந்துவிட்டார். அந்தணரின் மனைவியாக வந்திருக்கும் கங்கையை அழைத்து பாத்திரத்தைக் கொண்டு வரப் பணித்துவிட்டு, தண்ணீருக்குள் இறங்கினார். பாத்திரத்துடன் வந்த கங்கை, முனிவரைக் காணாததாலும், தண்ணீரைக் கண்ட சந்தோஷத்திலும், ஆற்றுக்குள் இறங்குகிறாள். இறங்கியதும் மறைகிறாள்.
தண்ணீரில் இறங்கிய பெண் திரும்பி வராததால், அந்தணர் திரும்ப வந்து கேட்கும்போது என்ன செய்வது என்று அழுது புலம்பலானார் பாஸ்கர முனிவர்.
இமவானிடம் பெண் கேட்கப் போன பரமேஸ்வரன், பார்வதியை மணந்து, குமரன் பிறந்து, தாராகாசுரன் அழிவும் நிகழ்ந்தது. அதன் பின்னர் சிவபெருமான் மீண்டும் அந்தணராக வடிவம் பூண்டு பாஸ்கர முனிவரிடம் வந்து, தான் விட்டுச் சென்ற பெண்ணை ஒப்படைக்கக் கோரினார். அவருக்குப் பதில் சொல்லத் தெரியாமல், லிங்கத்தைக் கட்டிப்பிடித்து அழுதார் முனிவர்.
லிங்கத்திலிருந்து வெளிப்பட்ட சிவபெருமான், பாஸ்கர முனிவர்க்கு கல்யாண கோல தரிசனம் தந்தார். முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க இங்கேயே எழுந்தருளியுள்ளார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
காவிரியின் உபநதியான அரசலாற்றில் கங்கா தேவி இறங்கி மறைந்ததால், இந்த நீரை புரோக்ஷணம் செய்து கொண்டாலே கங்கா ஸ்நான பலன் கிடைக்கும். ருத்ரனின் கங்கை வசித்த ஸ்தலம் என்பதால் இவ்வூர் ருத்ரகங்கை எனப் பெயர் கொண்டது. மாசிமக தீர்த்தவாரிக்கு ஆபத்சகாயேஸ்வரர் ஆற்றில் இறங்குகிறார்.