தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டதனால் வீரபத்ரரால் தண்டிக்கப்பட்ட அக்னி தேவன் தனது சாபத்தைப் போக்கிக் கொள்ள, அக்னி தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி, இவ்விறைவனை வழிபட்டு நற்பலன்கள் பெற்றான்.
கணவனை இழந்த ரதி மீது இச்சை கொண்ட சூரியன் ரதியினால் சபிக்கப்பட்டு தனது வலக்கரத்தைப் பின்னமாக்கிக் கொண்டான். இவ்விறைவனை பூஜித்து இழந்த கையை மீண்டும் பெற்றான்.
அரிச்சந்திரனுக்கு வரவிருந்த ஆபத்திலிருந்து காப்பாற்றியதால் ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயரைக்கொண்டார்.
பாண்டவர்களுக்கு ஸ்தல விருட்சமருகே காட்சி தந்த இறைவன் என்பதால் பாண்டவேஸ்வரர். அக்னி வடிவில் இருப்பதால் அக்னீஸ்வரர் என திருநாமம் கொண்டார்.
தாரகன் எனும் ராட்சஸன் அனைவரையும் துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க சிவபெருமானை அணுகிய தேவர்கள், அவர் யோகத்தில் இருப்பதைப் பார்த்து, அவரது யோகத்தைக் கலைக்க மன்மதனை அனுப்பினர். யோகம் கலைந்ததால் கோபம் கொண்ட இறைவன் மன்மதனை எரித்தார். இழந்த கணவனை மீட்டுத் தர வேண்டி ரதி பிரார்த்தித்து தவம் இருந்தாள். இறைவனருளால் உயிர் பிழைத்த மன்மதன் ரதி தேவியுடன் சேர்ந்து வழிபட்டான் என ஸ்தல வரலாறு.