சிங்கவர்மன் எனும் அரசன், தில்லை வனத்து பொய்கையில் நீராடியதால் அவனுக்கு இருந்த தோல் வியாதி குணமாகியது. மகிழ்வுற்ற அரசன் கரையேறியதும் அங்கிருந்த பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் முனிவர்களை தரிசித்து மேலும் மகிழ்வுற்றான். அவர்களால் அவனுக்கு நடராஜரின் ஆனந்த தாண்டவம் காணும் பாக்யம் கிடைத்தது.
தாம் கண்ட ஆனந்த தாண்டவ நடராஜரை சிற்பிகளிடம் விவரித்து, தாமிர உலோகம் தந்து செப்புச் சிலை ஒன்றை வடிக்கச் செய்தான். சிலை உருவானது. 'செப்பு சிலையே இத்தனை அழகா?' என வியந்து பொன்னால் ஒன்று செய்யுமாறு பணித்தான்.
சிங்கவர்மனை சோதிக்க எண்ணிய இறைவன், முதியவர் தோற்றத்தில் வந்து, சிற்பிகளிடம் கொஞ்சம் செப்புக் காசுகளைத் தந்து, பொன்னோடு சேர்த்து உருக்கிக் கொள்ளச் செய்தார். இதனால் பொற்சிலை உருவாகாமல், செப்புச் சிலையே உருவானது. சிற்பிகளை தண்டித்தான் அரசன்.
பின்னர் அரசனது கனவில் தோன்றிய இறைவன், சிங்கவர்மனின் கண்களுக்கு மட்டும் தாம் பொற்சிலையாக தெரிவதாகவும், சிலையோடு சிற்பிகள் பயணிக்கட்டும் என்றும், எந்த இடத்தில் பாரமாக இருக்கிறதோ, அங்கு இறக்கி வைத்து பிரதிஷ்டை செய்யலாம் என்றும் தெரிவித்தார்.
அதன்படி சிலையோடு சிற்பிகள் பயணிக்கையில், தாமிரபரணிக் கரையருகே சிலை கனத்ததால், கீழே இறக்கி வைத்து விட்டு, களைப்பாற படுத்து உறங்கினார்கள். விழித்து எழுந்து பார்த்தால் சிலையைக் காணவில்லை. பதறிப் போய் அவ்வூர் அரசனிடம் சென்று முறையிட்டனர்.
அவ்வூரை ஆண்ட ராம பாண்டியனின் கனவில் தோன்றிய இறைவன், நடந்தவற்றைக் கூறி, சிலை தங்கிய ஊரின் அடையாளத்தை கண்டுபிடிக்கும் வழியையும் கூறினான். அதன்படி காற்சிலம்பொலி சத்தத்தை தொடர்ந்து சென்றும், பின்னர் சாரை சாரையாக எறும்புகள் ஊர்ந்து செல்வதை தொடர்ந்தும் சென்றான். சிற்பிகள் தொலைத்த சிலை இருப்பதைக் கண்டு அதை பிரதிஷ்டை செய்து, அங்கேயே கோவில் ஒன்றையும் எழுப்பினான். கூத்தபிரான் செப்பறைக்கு வந்த வரலாறு இதுவே என்கிறது ஸ்தல வரலாறு.
செப்பறை நடராஜரின் அழகில் மயங்கிய வீரபாண்டியன் எனும் அரசன், அதே போன்ற சிலை தனக்கும் வேண்டும் என ஆசைப்பட்டு பெற்றுக் கொண்டானாம்.
பொருணை ஆற்றின் கரையில் நடராஜரின் நடனத்திற்கேற்ப அசைந்தாடும் பனை மரச் சோலைகளினூடே அமையப் பெற்ற ஆலயம். தென் சிதம்பரம் எனப் போற்றுகின்றனர்.