இத்தலத்திற்கு வருகை தந்த திருநாவுக்கரசர் இவ்வூர் எல்லையை அடைந்ததும், சிவலிங்கங்கள் ஊர் முழுவதுமாக காட்சி அளிப்பதைக் கண்டு, காலால் நடக்க மனமின்றி, தலையால் நடந்ததால் இவ்வூருக்கு தலையாலங்காடு எனப் பெயர் வந்தது. சங்க காலத்தில் தலையாலங்கானம் எனப் பெயர் பெற்றது.
சங்க காலத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் இவ்வூரில் போர் புரிந்து வென்றதால் 'தலையாலங்கானத்துச் செறுவென்ற பாண்டிய நெடுஞ்செழியன்' என அழைக்கப்பட்டான்.
தாருகாவனத்து முனிவர்களை அடக்கி, அவர்கள் அனுப்பிய முயலகன் முதுகின் மீது சிவபெருமான் நடனம் ஆடிய ஸ்தலம் இது. ஸ்வாமியே நர்த்தனம் ஆடியதால் ஸ்வாமிக்கு நர்த்தனபுரீஸ்வரர் எனும் திருநாமம் வந்தது. இதனால் சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இத்தலம் போற்றப்படுகிறது. இங்கு ஸ்வாமியே நடனமாடியதால் நடராஜர் சந்நிதி இல்லை.
சிந்தாமணியைப் பெற வேண்டி கபில முனிவர் பூஜித்த ஸ்தலம் இது. சரஸ்வதி தேவிக்கு சிவபெருமான் ஜோதிர்லிங்கமாக காட்சி தந்தருளிய ஸ்தலம். தை அமாவாசை தினத்தன்று திருநாவுக்கரசருக்கு இறைவன் காட்சி தந்த ஸ்தலம்.