சிவபெருமானின் யோக நிலையை கலைத்து ஊடல் செய்த அம்பிகை, அவரால் சபிக்கப்பட்டு பூலோகம் வந்து இத்தலத்தில் தவம் மேற்கொண்டாள். தண்ணீரைத் திரட்டி லிங்கம் ஒன்றை அமைத்த உமாதேவியார் அதை பிரதிஷ்டை செய்து பூஜித்தார் என புராண வரலாறு. தண்ணீரே திரண்டு லிங்கமானதால் அமுதலிங்கம் எனப் போற்றப்படுகிறார். அப்பு என்றால் தண்ணீர் - எனவே பஞ்சபூத ஸ்தலங்களுள் அப்பு ஸ்தலமாக விளங்குகிறது. இதனால் லிங்கம் உள்ள இடத்தில் நீர் இருந்து கொண்டே இருக்கின்றது.
பார்வதி தேவியே அகிலாண்டேஸ்வரியாக இத்தலம் வந்து தவமிருந்து, இறைவனை பூஜித்து வழிபட்டாள். அவள் பிரதிஷ்டை செய்த அமுத லிங்கத்திற்குள் இறைவன் எழுந்தருளியுள்ளார். இறைவனை மீண்டும் மணந்து கொள்ளும் பாக்கியம் இன்னும் கிடைக்காததால் இன்றளவும் அவள் நீராய் இருந்து கொண்டு இறைவனை பூஜிக்கின்றாள் என ஐதீகம்.
அம்பாளே ஸ்வாமியை பூஜித்த ஐதீகத்தைக் காட்ட, இன்றும் உச்சிக்கால பூஜையை நடத்தும் அர்ச்சகர் சேலை கட்டிக் கொண்டு வந்து, கோபூஜை - சிவலிங்க பூஜை ஆகியவற்றை செய்கின்றார். பூஜை முடிந்ததும் நைவேத்திய பொருட்களை பசுவுக்கு ஊட்டி விடுவார்.
அம்பாள் சந்நிதியிலிருந்து அகிலாண்டேஸ்வரி (அர்ச்சகர் வடிவில்) சிவபெருமானை பூஜிக்க செல்லும்போது அகிலா என்ற பெயர் கொண்ட கோவில் யானை முன்னால் செல்கிறது. இந்த உச்சிக்கால பூஜையில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் காத்திருப்பார்கள். (உச்சி கால பூஜை: காலை 11 மணி முதல் மதியம் 12.00 மணி வரை).
ஆதியில் இத்தலம் யானை உலாவும் சோலையாக இருந்ததால், ஆனைக்கா என்றும் கஜாரண்யம் என்றும் பெயர் கொண்டது. யானை வழிபட்டதால் திருவானைக்கா எனப் பெயர்.
ஜம்பு மகரிஷி என்பவர் கயிலாயம் சென்று சிவபெருமானை தரிசித்தபோது, இறைவனுக்கு ஒரு வெண் நாவல் கனியை தந்தார். அதை சாப்பிட்ட இறைவன், பழத்தின் கொட்டையை உமிழ்ந்தார். அந்த கொட்டையை பிரசாதமாக கருதி விழுங்கி விட்டார் மகரிஷி. அது மகரிஷிக்குள்ளிருந்தபடியே நாவல் மரமாக முளைத்தது. அந்த நாவல் மரத்தின் கீழ் இறைவன் லிங்க வடிவில் எழுந்தருளினார். சிவபெருமான் நாவல் மரத்தின் கீழ் தோன்றியதால் ஜம்புகேஸ்வரம் என்ற பெயரும் ஏற்பட்டது.
காவிரி ஆற்றின் செழிப்பான கரையிலுள்ள சோலையின் நடுவே இருக்கும் வெண்ணாவல் மரத்தடியில் எழுந்தருளி இருந்த அழகிய சிவலிங்கத்தை, அனுதினமும் பூஜித்து வந்தது யானை ஒன்று. தனது தும்பிக்கையில் நீர் கொணர்ந்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு சிவத்தொண்டு செய்தது.
மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மீது விழாதிருக்க வேண்டும் என எண்ணிய சிலந்தி ஒன்று வலை பின்னி பந்தல் போல் அமைத்து பாதுகாத்து, சிவத் தொண்டு புரிந்து வந்தது.
கயிலாயத்தில் சிவத்தொண்டு புரிந்து வந்த சிவகணங்களாகிய மாலியவான் மற்றும் புஷ்பதந்தன் ஆகிய இருவருமே, ஒருவர்க்கொருவர் சாபமிட்டுக் கொண்டு, யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்ததாக புராணக் குறிப்பொன்று தெரிவிக்கின்றது. முன்ஜென்ம ஞாபகம் இருந்ததால், இப்பிறவியிலும் சிவத்தொண்டு புரிந்து வந்தனர்.
தினமும் யானை பூஜை செய்வதும், சிலந்தி வலை பின்னுவதுமாக தொடர்ந்து நடைபெற்று வந்தபோது, ஒரு நாள் யானை சிலந்தி வலையை சிதைத்தது. மீண்டும் சிலந்தி வலை பின்னியது. அடுத்த நாளும் யானை வலையை சிதைத்தது. இப்படியாக தொடர்ந்து நடக்கவே கோபம் கொண்ட சிலந்தி, யானையின் தும்பிக்கைக்குள் போய் கடித்தது. யானை இறந்து வீழ்ந்தது. சிலந்தியும் இறந்தது. இறந்த யானை தினமும் சிவ பூஜை செய்த பலனினால் கைலாயம் சென்றது.
இறந்த சிலந்தியோ, மறு பிறவியில் அரசனாகப் பிறந்தது. கோச் செங்கட் சோழன் என்ற பெயர். மாசி மாத சதய நட்சத்திர திருநட்சத்திர நாள். முன் ஜென்ம ஞாபகம் தொடர்ந்ததால், கோச்செங்கட் சோழன், சிவனாருக்கு பல கோவில்கள் கட்டி சிவத் தொண்டு செய்து வந்தான். யானைகள் கோவிலுக்குள் புகாதபடி, மாடக் கோவில்களை எழுப்பினான். சோழன் கட்டிய 78 மாடக் கோவில்களுள் முதல் கோவில் இதுவே.
கட்டுமலை மீது கோவில் எழுப்பி, அதற்கு போகும் வழியாக, யானைகள் ஏறி வர முடியாதபடி படிகள் அமைத்து நிர்மாணிக்கப்படும் கோவில்களை மாடக்கோவில்கள் என்பர்.
கோச்செங்கட் சோழன் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? பிரசவ காலத்திற்கு தயாராக இருந்த அரசி பெருந்தேவி கமலவதியிடம், சோதிடம் கூறிய சோதிடர்களின் கூற்றுப்படி, ஒரு நாழிகை கழித்து பிறக்கும் குழந்தை, பேரரசனாக இருப்பான் என்பதால், தனது கால்களைக் கட்டி, தன்னை தலைகீழாகத் தொங்க விடச் செய்தாள். ஒரு நாழிகை கழித்துப் பிறந்த குழந்தையை தந்து விட்டு இறந்தாள். தலை கீழாக தொங்கியதில் குழந்தையின் கண்கள் சிவப்பாக இருந்ததால் கோச் செங்கட் சோழன் எனப் பெயர் கொண்டதாக கூறப்படுகிறது.
தான் படைத்த பெண்ணின் மீது மோகம் கொண்ட பிரம்மாவிற்கு பாடம் புகட்ட, அம்பிகை சிவனாகவும், சிவபெருமான் அம்பிகையாகவும் மாறு வேடம் தரித்த நிகழ்வை, பிரம்மோற்சவத்தின் போது ஐதீகமாக கொண்டாடுகின்றனர்.